கடலூர், மார்ச் 18: கடலூர் நீதிமன்றத்துக்கு இ-மெயிலில் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் செயல்பட்டு வருகிறது. நேற்று காலை வழக்கம்போல் நீதிமன்றம் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது நீதிமன்றத்துக்கு ஒரு இ-மெயில் வந்தது. அதில், பிற்பகல் 1 மணிக்கு 16 சயனைடு நச்சுவாயு குண்டுகள் வெடிக்கவுள்ளன. நீதிபதிகள் மற்றும் பொதுமக்களை வெளியேற்றவும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து கடலூர் புதுநகர் போலீசாருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் நீதிமன்றத்துக்கு விரைந்து வந்து தீவிரமாக சோதனை மேற்கொண்டனர். இருப்பினும், வெடி பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இச்சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
