புதுக்கோட்டை: கட்டாய திருமணம் செய்ய வீட்டில் இருந்த கல்லூரி மாணவியை காரில் கடத்த முயன்றபோது தடுத்த தாயை வெட்டி கொன்ற செங்கல்பட்டு பாஜ நிர்வாகி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி காளியம்மாள்(44). இவரது மகள்கள் சுவேதா(20), சுபதர்ஷினி(18), மகன் பாலமுருகன்(12). இந்நிலையில் சுரேஷ் செங்கல்பட்டை சேர்ந்த விஜயலெட்சுமியை 2வது திருமணம் செய்து கொண்டு மேல்மருவத்தூர் பகுதியில் வசித்து வருகிறார்.
அவருடன் விஜயலெட்சுமியின் தம்பி விவின்(32) வசித்து வருகிறார். விவின் செங்கல்பட்டு மாவட்ட பாஜ அமைப்புசாரா தொழிற்பிரிவு மாவட்ட தலைவராக உள்ளார். இவர் சுபதர்ஷினியை திருமணம் செய்ய முடிவு செய்திருந்தார். இதற்காக தனது அக்கா விஜயலட்சுமியுடன் நெடுவாசலுக்கு சென்று காளியம்மாளிடம் பெண் கேட்டார். அதற்கு காளியம்மாள் மறுத்துவிட்டார். இதையடுத்து விவின் செங்கல்பட்டுக்கு சென்று விட்டார். கடந்த 13ம் தேதி சுபதர்ஷினியை கட்டாய திருமணம் செய்வதற்காக விவின் மேல்மருவத்தூரில் காரில் தயாராக இருந்தார்.
அப்போது கல்லூரி முடிந்து விடுதிக்கு திரும்பி கொண்டிருந்த சுபதர்ஷினியை கடத்த முயன்றார். அவரிடமிருந்து சுபதர்ஷினி தப்பித்து விடுதிக்கு சென்றுவிட்டார். பின்னர் இரவு பஸ் ஏறி நெடுவாசல் வீட்டுக்கு வந்தார். இந்த தகவலறிந்த விவின், தனது நண்பர்கள் 3 பேருடன் நேற்று சுபதர்ஷினி வீட்டுக்கு சென்று கட்டாய திருமணம் செய்ய மாணவியை காரில் கடத்த முயன்றார். இதை காளியம்மாள் தடுத்ததால் விவின் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து காளியம்மாளை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றார்.
போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய 4 பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே போலீசார் விவின், நண்பர்கள் செங்கல்பட்டை சேர்ந்த சதீஷ்குமார்(37), தினேஷ்(18), மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.
