சென்னை: மேற்கு ஆசிய போரால் மக்கள் பாதிப்படைய கூடாது என மாநில அரசின் அதிகாரங்களுக்குட்பட்ட நடவடிக்கைகளை எடுத்துவிட்டோம். மக்கள் நலனைக் காக்க ஒன்றிய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்யெழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்:
- உணவகங்கள், டீக்கடைகள், Cloud Kitchen உள்ளிட்ட உணவு உற்பத்தித் தொழிற்கூடங்கள் LPG-க்குப் பதிலாக மின் அடுப்புகளைப் பயன்படுத்தும்போது ஏற்படும் கூடுதல் மின்சார நுகர்விற்கு, ஒரு யூனிட்டுக்கு ரூ.2 மானியம்!
- MSME நிறுவனங்கள் மின் அடுப்புகள், மின் சூடேற்றிகள் கொள்முதல் செய்வதற்கு மானியத்துடன் கூடிய கடன்!
- தமிழ்நாட்டில் 60,698 தொழிற்சாலைகள் LPG, CNG போன்ற எரிபொருட்களுக்கு மாற்றாக மண்ணெண்ணெய், RDF, HSD, பயோமாஸ் போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு TNPCB இசைவாணை (CTE/CTO) பெறத் தேவையில்லை.
- இந்த இடர்ப்பாட்டினால் மீதமாகும் தேவைக்கு அதிகமான பாலினைப் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து ஆவின் பால் கூட்டுறவுச் சங்கங்களில் கட்டுப்பாடுகள் ஏதுமின்றிப் பெற்றுக்கொள்ள ஆணை.
- உணவகங்கள் மூடப்படும் வேளையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தினைக் கருத்தில் கொண்டு, காய்கறிகள் மற்றும் பழங்களை 194 உழவர் சந்தைகளில் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் அவர்கள் விற்பனை செய்துகொள்ள அனுமதி.
- மாநில அளவில் வணிக நிறுவனங்களுக்கு முறையாக LPG சிலிண்டர் அளவீட்டினை ஒதுக்கீடு செய்து கண்காணிக்க, தலைமைச் செயலாளர் அவர்கள் கண்காணிப்பில், அரசு உயர் அலுவலர்கள் கொண்டகுழு.
- மாவட்ட அளவில் எண்ணெய் விநியோக நிறுவனங்களின் பொறுப்பு அலுவலர்களை உள்ளடக்கிய மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான குழு.
- இந்த மாதம் பொது விநியோகத் திட்டத்திற்குக் கூடுதலாக 3,228 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க ஆணை.
