×

முதல்வரின் சிறப்பான ஆட்சியால் திமுகவின் வெற்றி பிரகாசம்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

தென்காசி: முதல்வரின் சிறப்பான ஆட்சியால் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றாலத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். சமீபத்தில் திமுகவில் இணைந்துள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தென்காசி மாவட்டம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் தொகுதிகளில் இன்றும், நாளையும் தேர்தல் சுற்றுப்பயணம் செய்கிறார். இந்நிலையில் இன்று அவர் குற்றாலத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல் மு.க.ஸ்டாலின் அனைத்து மக்களும் பயன்படும் வகையில் திட்டங்களை தீட்டி சிறப்பாக அமல்படுத்தி வருகிறார். அவருடைய திட்டங்களால் அனைத்து தரப்பு மக்களும் பயனடைந்து வருகின்றனர். அந்த அடிப்படையில் மக்கள் மீண்டும் முதலமைச்சராக ஸ்டாலின் வரவேண்டும் என்று எண்ணுகிறார்கள். திமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதற்குக் காரணம் முதல்வரின் சிறப்பான ஆட்சி. எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களை எந்த அளவிற்கு மதித்தார் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். அது இந்த தேர்தலில் எதிரொலிக்கும். அதிமுகவில் எடப்பாடியின் தலைமையை ஆட்சியிலும் சரி, கட்சியிலும் சரி மக்கள் ஏற்கவில்லை.

அதனால்தான் அவருக்கு தொடர் தோல்வியை நாட்டு மக்கள் தந்தார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் என்ன தீர்ப்பு வழங்கினார்களோ அதே தான் சட்டசபை தேர்தலிலும் மக்கள் வழங்குவார்கள். விஜய் கொள்கை என்ன, கோட்பாடு என்ன என்பது அவரைப் பார்த்து தான் கேட்க வேண்டும். திமுக இரண்டாவது முறையும் ஆட்சிக்கு வந்தது என்ற வரலாற்றுச் சாதனையை முதல்வர் உருவாக்குவார்.
இவ்வாறு கூறினார்.

Tags : Dimuka ,Paneer Selvam ,TENKASI ,Dimughal ,O. Paneer Selvam ,Tenkasi District ,Kadayanallur ,Sangarankovil ,Vasudevanallur ,
× RELATED சட்டமன்றத் தேர்தலில் திமுக...