×

க்ரைம் செய்திகள் 3 மாவட்டத்துக்கு மட்டும் ரூ.5,000 கோடியா? பயிர் கடன் தள்ளுபடி தேர்தலுக்காக நடத்தும் நாடகம்

திருச்சி, பிப்.11: திமுக விவசாய அணி மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடந்தது. மாநில தலைவர் என்.கே.கே.பெரியசாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் தமிழ்மணி, மதியழகன், செயலாளர்கள் சின்னசாமி, ஏகேஎஸ் விஜயன் உள்பட பலர் பங்கேற்றனர்.

செயலாளர் ஏகேஎஸ் விஜயன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திமுக தலைவர் ஸ்டாலின், ‘திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற உடனே விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்’ என தெரிவித்தார். கடந்த காலங்களில் ஆளும் அதிமுக அரசு விவசாயிகளை கொஞ்சம் கூட எட்டிப்பார்க்காமல், கோரிக்கைகளை நிறைவேற்றாமல், பல்வேறு சட்டப்போராட்டங்களை நடத்தியும் அவர்கள் பிரச்னைக்கு விடிவு காணாத அதிமுக அரசு, தலைவர் ஸ்டாலின் அறிவித்தவுடன் அவசர அவசரமாக பயிர் கடன் தள்ளுபடி என அறிவித்தது. கடன் முழுமையாக தள்ளுபடி அல்ல, ஒத்தி வைப்புக் கடன் இல்லை, மத்திய காலக் கடன் இல்லை, நீண்ட கால கடன் தள்ளுபடி அல்ல பயிர் கடன் 31.01.2021 வரை வாங்கியவர்களுக்கு தள்ளுபடி என்று சொல்லுகிறார்.

குறிப்பாக காவிரி டெல்டா பகுதியில் வெறும் ஆயிரம் கோடி ரூபாய் தான் தள்ளுபடி செய்யப்படுகிறது. அதேபோல சேலம், ஈரோடு, தர்மபுரி ஆகிய 3 மாவட்டங்களில் மட்டுமே 5,000 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. அது எப்போது வழங்கப்பட்டுள்ளது என்று சொன்னால் டிசம்பரிலிருந்து ஜனவரி 31 வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. டிசம்பரில் கடன் வழங்கும் காலமே இல்லை. இது வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுககாரர்களுக்கு மட்டுமே வழங்கிவிட்டு இப்படியொரு நாடகத்தை நடத்தி உள்ளனர். இப்போது பயிர்கடன் மட்டும் தள்ளுபடி என்கின்றனர். தேர்தலுக்காக பயிர் கடன் தள்ளுபடியை அதிமுக அரசு அறிவித்து நாடகமாடுகிறது’ என்றார்.

Tags : Crime News ,districts ,election ,
× RELATED இரக்கம் காட்டாத வெயில்; தமிழ்நாட்டில்...