கோவை, மார்ச் 10: தமிழகம் முழுவதும் பிளஸ்-2 மாணவர்களுக்கான தேர்வு நடந்து வருகிறது. இந்த தேர்வினை கோவை மாவட்டத்தில் 36 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இந்த மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் பாடத்திற்கான தேர்வுகள் முடிந்த நிலையில், முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் துவங்கியுள்ளது. அதன்படி, வேதியியல், கணக்கியல் மற்றும் புவியியல் பாடத்திற்கான தேர்வு நேற்று நடந்தது. இதில், கணக்கியல் தேர்வினை 14,059 மாணவ, மாணவிகள் எழுதினர். 182 பேர் எழுதவில்லை.
புவியியல் தேர்வை 550 பேர் எழுதினர். 19 பேர் எழுதவில்லை. மேலும், வேதியியல் தேர்வினை 20,452 பேர் எழுத இருந்தனர். இவர்களில், 20,351 பேர் தேர்வு எழுதினர். 101 பேர் தேர்வு எழுதவில்லை. இந்த தேர்வு கடினமாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தரப்பில் தெரிவித்தனர். குறிப்பாக, ஒரு மதிப்பெண் மற்றும் 5 மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்ததாக அவர்கள் கூறினர்.
