×

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சமூக ஊடகங்களை பார்க்க தடை விதிப்பு: முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு

 

கர்நாடகா: கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சமூக ஊடகங்களை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதை தடுக்கவும் கல்வியில் செல்போன்களால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்த கடுமையான விதிகள் கொண்டு வரப்படும். மேகதாது திட்டம் தொடர்பாக புதிய அறிக்கை தயாரிக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. கர்நாடக சட்டப்பேரவையில் பட்ஜெட் உரையில் முதலமைச்சர் சித்தராமையா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

சிறுவர்கள் சோஷியல் மீடியாக்களை பயன்படுத்த பல்வேறு நாடுகளும் தடை விதித்து வருகிறது. இந்நிலையில், கர்நாடாகவில் சிறார்கள் சோஷியல் மீடியாக்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்திருக்கிறார். கர்நாடக அரசு 16 வயதுக்குட்பட்டவர்கள் மொபைல் போன் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து தீவிரமாக பரிசீலித்து வந்தது. இது குறித்து முதலமைச்சர் சித்தராமையா மாநிலப் பொதுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்தியிருந்தார்.

சிறுவர்கள் சமூக ஊடகங்களையும், மொபைல் போன்களையும் பயன்படுத்துவதில் ஆஸ்திரேலியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் கொண்டுவந்துள்ள கட்டுப்பாடுகளை முதல்வர் உதாரணமாகக் காட்டினார். துணைவேந்தர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த அவர், “இந்த நாட்களில் மாணவர்கள் சமூக ஊடகங்களால் அதிகம் பாதிக்கப்படுவதைக் காண்கிறோம். பல நாடுகள் இதை ஏற்கெனவே செய்துள்ளன” என்று குறிப்பிட்டார்.

மொபைல் போன்கள், சமூக ஊடக உள்ளடக்கங்கள் இளைஞர்களை போதைப்பொருள் வலையில் சிக்க வைப்பதாகவும், அதுபோன்ற தீங்கு விளைவிக்கும் பழக்கவழக்கங்களின் தாக்கத்தைப் பற்றியும் முதல்வர் கவலை தெரிவித்தார். குழந்தைகளின் திரை நேரத்தைக் குறைத்து, படிக்கும் பழக்கத்தை வளர்ப்பதற்காக ‘மொபைலை கீழே வைத்து புத்தகத்தை எடுங்கள்’ என்ற திட்டத்தையும் அரசு தொடங்கியுள்ளது.

மொபைல் பயன்பாடு குறித்து அரசு பேசுவது இது முதல் முறையல்ல. கடந்த மாதம், ஐடி/பிடி அமைச்சர் பிரியங்க் கார்கே, குழந்தைகள் சமூக ஊடக அணுகலைக் கட்டுப்படுத்துவதற்கான அரசின் நோக்கத்தைப் பற்றி சட்டமன்றத்தில் பேசியிருந்தார். சமீபத்தில், சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ், சமூக ஊடகங்களுக்கு அதிகப்படியான வெளிப்பாடு காரணமாக இளைஞர்களிடையே ஏற்படும் மன மற்றும் உடல்நலப் பிரச்சனைகள் குறித்து கவலை தெரிவித்திருந்தார்.

டிஜிட்டல் போதைப்பழக்கத்திற்கு அடிமையாவதிலிருந்து இளைஞர்களை காக்க சட்டம் கோரி ஒன்றிய சுகாதார அமைச்சருக்குக் கடிதம் எழுதவிருப்பதாகவும் தினேஷ் குண்டு ராவ் கூறினார். இத்தகைய தடை எவ்வாறு அமல்படுத்தப்படும் என்பது குறித்து முதல்வர் எந்தவித குறிப்பிட்ட தகவல்களையும் வெளியிடவில்லை. இப்படி இருக்கையில் இன்று சட்டமன்றத்தில் பேசிய சித்தராமையா, சிறார்கள் சோஷியல் மீடியாவை பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு குறித்த அப்டேட்கள் விரைவில் வெளியாக இருக்கின்றன.

 

 

Tags : Karnataka ,Chief Minister Siddaramaiah ,Chief Minister ,Siddaramaiah ,
× RELATED ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய்...