×

குன்னூர் அருகே இன்று அதிகாலை குடியிருப்புக்குள் உலா வந்த சிறுத்தை: பொதுமக்கள் அச்சம்

குன்னூர்: குன்னூர் அருகே குடியிருப்புக்குள் உலா வந்த சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபகாலமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் அண்ணாநகர் கிராமத்தில் ​​சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில், அந்த கிராமம் அடர்ந்த புதர்கள் மற்றும் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் கரடி, காட்டுமாடு, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் அவ்வப்போது சாலைகளுக்கு வருவது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில், இன்று (செவ்வாய்) அதிகாலை 4 மணியளவில் கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை வீதிகளில் சாதாரணமாக நடந்து சென்றது. பின்னர் அருகில் இருந்த புதருக்குள் புகுந்து மறைந்தது. இந்த காட்சிகள் அங்குள்ள ஒரு வீட்டின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. தொடர்ந்து வனவிலங்குகளின் அச்சுறுத்தல் இருந்து வருவதால், அண்ணாநகர் பகுதி மக்கள் வெளியே நடமாட அச்சமடைந்து வருகின்றனர். வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவதால் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. வனத்துறையினர் உடனடியாக இப்பகுதியில் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். அடிக்கடி ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Coonoor ,Nilgiris district ,
× RELATED உலக வனநாளையொட்டி 6 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய வனத்துறை முடிவு