×

பொள்ளாச்சி அருகே ஆழியார் தடுப்பணையில் தடைமீறி குளிக்கும் சுற்றுலா பயணிகள்: கண்காணிப்பு தீவிரப்படுத்த வலியுறுத்தல்

 

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த ஆழியார் தடுப்பணையில் தடையை மீறி சுற்றுலா பயணிகள் குளித்ததால் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை, பூங்காவிற்கு தினமும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால் ஆழியார் அணைப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. தற்போது ஆழியார் அணையிலிருந்து வினாடிக்கு 350 கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு உள்ளது.

இந்த தண்ணீர், ஆழியாறு அணை வழியாக புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கும், குடிநீர் தேவைக்கும் கொண்டு செல்லப்படுகிறது. அதிலும், தடுப்பணையில் மறுகால் வழியாக பாய்ந்து செல்கிறது. இந்த தடுப்பணைகளில் சுற்றுலா பயணிகள் தடையை மீறி குளித்து செல்வதை தொடர்ந்துள்ளனர். விடுமுறை நாளான நேற்று ஆழியாருக்கு வந்த சுற்றுலா பயணிகள் பலர், அருகே உள்ள ஆழியாற்று தடுப்பணையில் குளித்து சென்றனர். அங்கு குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என தெரிந்தும், போலீசார் மற்றும் பொதுப்பணித்துறையினர் கண்காணிப்பு இல்லாததால், சுற்றுலா பயணிகள் குளித்து சென்றனர். எனவே, தடுப்பணையில் உயிர்பலி உள்ளிட்ட விபரீத சம்பவங்கள் நடப்பதற்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags : Aaliyar Dam ,Pollachi ,Zaliyar ,Gowai District ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கான பிரத்யேக...