ஆத்தூர், பிப்.9: தலைவாசல் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலைகிராமங்களில் சாராயம் காய்ச்சி, கடத்தி வந்து தலைவாசல், வீரகனூர், ஆத்தூர், கெங்கவல்லி உள்ளிட்ட பகுதியில் விற்பனை செய்யப்படுவதாக ஆத்தூர் டிஎஸ்பி இமானுவேல் ஞானசேகரனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று எஸ்ஐ வீரமணி உள்ளிட்ட தனிப்படை போலீசார், கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக மலைப்பகுதியிலிருந்து வந்தவரை நிறுத்தி விசாரித்த போது, போலீசாரிடமிருந்து தப்ப முயன்றார். அவரை மடக்கி பிடித்து விசாரித்த போது, கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலை தாலுகா மேல்முருவம் கிராமத்தை சேர்ந்த தனபால்(24) என்பதும், மலை கிராமத்திலிருந்து லாரி டியூப்பில் 70 லிட்டர் சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து, புதரில் மறைந்து வைத்திருந்த 70 லிட்டர் சாராயத்தை போலீசார் கைப்பற்றி அழித்தனர். பின்னர் தனபால் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.