உடன்குடி, பிப். 9: மெஞ்ஞானபுரம், ராமசுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த துரைச்சாமி மகன் நாராயணன். உடன்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்மறிகுளம் பஞ்சாயத்து துணைத்தலைவராக இருந்து வருகிறார். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த பந்தல் கான்ட்ராக்டர் லிங்கதுரைக்கும் நிலம் தொடர்பாக ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நாராயணன் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் ராமசுப்பிரமணியபுரத்தில் இருந்து மெஞ்ஞானபுரத்திற்கு பைக்கில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை லிங்கதுரை லோடு ஆட்டோ ஏற்றி கொல்ல முயன்றாராம். இச்சம்பவத்தில் உயிர்தப்பிய நாராயணன் கொடுத்த புகாரின் பேரில் லிங்கதுரை மீது மெஞ்ஞானபுரம் போலீசார் கொலை வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் இச்சம்பவத்திற்கு பதிலடியாக பஞ். துணைத்தலைவர் நாராயணன், அவரது உறவினர்கள் கணபதி, வெள்ளப்பாண்டி ஆகியோர், லிங்கதுரையின் பந்தல் குடோனுக்கு தீ வைத்து சென்றனர். இதில் பந்தல் தட்டிகள் மற்றும் கம்புகள் தீக்கிரையாகின. இதுகுறித்து லிங்கதுரையின் மனைவி கோமதி (38) மெஞ்ஞானபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் நாராயணன் உள்ளிட்ட மூவரைத் தேடி வருகின்றனர்.