- அமைச்சர்
- வேலு
- சென்னை
- பொது பணிகள்
- நெடுஞ்சாலைகள் மற்றும் சிறிய துறை
- பொதுப்பணித் திணைக்களம்
- கிண்டி
- நெடுஞ்சாலை ஆராய்ச்சி மையம்
சென்னை: சென்னை, கிண்டி, நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் உள்ள கூட்டரங்கில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, இன்று (23.2.2026) கடந்த 5 ஆண்டுகளில் நெடுஞ்சாலைத்துறையில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் மற்றும் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தினார்கள். இந்த ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் , கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை நினைவுகூர்ந்தார்.
முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் (CMRDP) மூலம், தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இணையாக நான்கு வழிச் சாலைகள் அமைக்கப்பட்ட விவரங்கள் குறித்தும், எந்த கால சூழ்நிலையிலும் தங்குத்தடையற்ற போக்குவரத்தினை உறுதிசெய்யும் வகையில், 1281 தரைப் பாலங்களுக்கு மாற்றாக, உயர்மட்ட பாலங்கள் கட்டப்பட்டுப் போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் இல்லாமல் செய்யப்பட்ட திட்டங்கள் குறித்தும், நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த கன்னியாகுமரி கண்ணாடி நடைபாலம். உலகளவில் முதன்முறையாக மெட்ரோ இரயில் சுரங்கப்பாதைமேல் கட்டப்பட்டு வரும் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை சாலை மேம்பாலம். மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற “நம்ம சாலை” செயலி. பணிகளின் முன்னேற்றம் குறித்து எளிதில் ஆய்வு செய்யக்கூடிய வகையில் “PIMS சாப்ட்வேர்”. NHAI என்று சொல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு இணையாக தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் (TANSHA) ஆகியவற்றை குறிப்பிட்டார்.
மலை வளைவுகளிலும், ஆபத்தான வளைவு பகுதிகளிலும் விபத்துக்களை குறைக்கும் வகையில் ரோலர் கிராஸ் பேரியர் அமைக்கப்பட்டது. 71க்கும் மேற்பட்ட இரயில்வே மேம்பாலங்கள் பல்வேறு நிலையில் நிலுவையில் இருந்தன. தொடர் ஆய்வுகள் மேற்கொண்டதன் விளைவாக 21க்கும் மேற்பட்ட இரயில்வே மேம்பாலங்கள் முடிக்கப்பட்டுள்ளன. நில எடுப்புப் பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத் துறைக்கு தனி மாவட்ட வருவாய் அலுவலர்களை (SDRO) நியமிக்கப்பட்டு, தொடர் ஆய்வுகள் விளைவாக திருநெல்வேலி, சிவங்கை, மன்னார்குடி உள்ளிட்ட நகராட்சி மற்றும் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்பட்டது மற்றும் நெரிசல் நிறைந்த நகரங்களில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டதையும் குறிப்பிட்டார்.
கோவை மாவட்டம், அவினாசி சாலையில், ரூ.1700 கோடி செலவில், 10.10 கி.மீ. நீளத்திற்கு ஜி.டி.நாயுடு மேம்பாலம், மதுரை மாவட்டம், கோரிப்பாளையத்தில் ரூ.214 கோடி செலவில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மேம்பாலம், சென்னை அடையாறு மத்திய கைலாஷ் சந்திப்பில், சர்தார்பட்டேல் சாலை – இராஜீவ் காந்தி சாலை இடையேயான போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு, ரூ.60.68 கோடி செலவில் “L” வடிவ மேம்பாலம் உள்ளிட்ட சாலை சந்திப்புகளில் சாலை மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்தார்.
விபத்து அதிகம் நடைபெறும் 100 சாலை சந்திப்புகள் கண்டறியப்பட்டு சாலை சந்திப்பு மேம்பாட்டு பணிகள் முடிக்கப்பட்டது. செயல் திறனை மேம்படுத்தும் நோக்கில் பொறியாளர்களுக்கும் அரசு அலுவலர்களுக்கும் எப்போதும் இல்லாத வகையில் தொடர் பயிற்சி அளிக்கப்பட்டது. வேலை முடிவுற்றவுடன் உடனடியாக பணப்பட்டுவாடா செய்ய போதுமான நிதி தொடர்ந்து வழங்கப்பட்டது. கழக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத்துறை தனித் துறையாக ஆரம்பிக்கப்பட்டு, 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, முதலமைச்சர் தலைமையில், பவள விழா சிறப்பாக கொண்டாடப்பட்டதையும் தெளிவாக எடுத்துரைத்தார்.
கலைஞர் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலைஞர் நூற்றாண்டு விழா கட்டிடம் சிறப்பாக கட்டப்பட்டு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது என்பதை குறிப்பிட்ட அமைச்சர் , திட்டப் பணிகளை பொருத்தவரை, கேப்பிட்டல் எக்ஸ்பெண்டிச்சர் எனப்படும் மூலதனச் செலவீடு மற்ற துறைகளை விட நெடுஞ்சாலைத்துறைக்கு அதிகம் என்பது மிகவும் பெருமைப்பட வேண்டியதாகும் என்று குறிப்பிட்டார்.
சாலைகளில், குழிப்பள்ளங்கள் ஏற்பட்டால் உடனடியாக பேட்ச் ஒர்க் செய்து பள்ளங்கள் இன்றி கட்டாயம் பராமரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். சேவை துறைகளால் சாலை வெட்டப்பட்ட இடங்களில், சாலை மறுசீரமைப்பு (Road Cut) பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். வரும் காலங்களில் வேலை நடைபெறும் இடங்களில் விபத்துகள் ஏற்படாதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும் என்று எடுத்துரைத்தார்.
சாலைகளில் முட்புதர்கள் அகற்றப்பட வேண்டும். ஒவ்வொரு கோட்டத்திற்கும் நிர்ணயிக்கப்பட்ட பட்ஜெட் இலக்கினை நல்ல தரத்துடன் முழுமையாக முடிக்கப்பட வேண்டும் என்று ஆணையிட்டார். கடந்த ஆய்வு கூட்டத்தில், ஏற்கனவே சொல்லப்பட்ட பராமரிப்புப் பணிகளை ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட மானிட்டரிங் ஆபீசர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அனைவரும் இதனை கடைபிடிக்க வேண்டும் என்று பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசுச் செயலாளர் டாக்டர் இரா.செல்வராஜ், நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குநர் தெ.பாஸ்கர பாண்டியன், நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் இரா.செல்வதுரை, தலைமைப் பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு) கு.கோ.சத்தியபிரகாஷ், சிறப்பு அலுவலர் (தொழில்நுட்பம்) இரா.சந்திரசேகர், அனைத்து தலைமைப் பொறியாறியாளர்கள், கண்காணிப்புப் பொறியாளர்கள், கோட்ட பொறியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

