சென்னை: மத்திய அரசு அலுவலகங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மார்ச் 17ம் தேதி டெல்லியில் போராட்டம் நடைபெறுகிறது. அகில இந்திய மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் சம்மேளனத்தின் அகில இந்திய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மத்தியபிரதேசம் போபாலில் அகில இந்திய தலைவர் கே.கணேசன் தலைமையில் நேற்று நடைபெற்றது. தமிழக தலைவர் எஸ்.மதுரம் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து கே.கணேசன் கூறியதாவது:
தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டத்தை கொண்டு வந்துள்ள மத்திய அரசை கண்டிக்கிறோம். மத்திய அரசு பணிகளிலும் அகில இந்திய அளவில் உள்ள அனைத்து மாநில அரசுகளிலும் பணியாற்றுகின்ற டி பிரிவு பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படாமல் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பணி நியமனம் செய்ய வேண்டும்.
மத்திய அரசு அமைத்துள்ள எட்டாவது ஊதிய குழு தற்போதுள்ள விலைவாசியினை கருத்தில் கொண்டு டி பிரிவு பணியாளருக்கு அடிப்படை ஊதியம் ரூ.30,000 ஆக நிர்ணயம் செய்யப்பட வேண்டும். தினக்கூலி தொகுப்பூதியம் மதிப்புதியும் சிறப்பு காலம் வரை ஊதியம் பகுதிநேர பணியாளர்கள் அனைவரையும் அனைத்து மாநில அரசுகளும் 10 ஆண்டுகள் பணி முடித்தால் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். ஏழாவது ஊதியக்குழு நிர்ணயத்தில் உள்ள குளறுபடிகளை அனைத்து மாநில அரசுகளும் கலைந்து மத்திய அரசு அறிவிக்கும் ஊதியக்குழு அடிப்படையில் டி பிரிவு பணியாளருக்கு ஊதிய உயர்வு நிர்ணயம் செய்ய வேண்டும். மருத்துவமனையில் பல்வேறு துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகின்ற அனைத்து டி பிரிவு பணியாளர்களையும் மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகளும் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இதுபோன்ற 10 அம்ச கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றிட வலியுறுத்தி வருகின்ற மார்ச் 17ம் தேதி டெல்லி ராம் லீலா மைதானத்தில் கோரிக்கை தர்ணா போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
