×

கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் 3வது நாளாக தொடர் மறியல் போராட்டம்

கரூர், பிப்.5: கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கங்களை சேர்ந்த 75 பேர்களை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் கிளையின் சார்பில் இழந்ததை மீட்டிட, இருப்பதை காத்திட தொடர்மறியல் போராட்டம் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் என்ற அடிப்படையில் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு தொடர் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். மூன்றாம் நாளாக நேற்று கரூர் தாலுகா அலுவலகம் முன்பு கரூர் மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், 49 பெண்கள் உட்பட 75 பேர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்ட பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்க வேண்டும். தொகுப்பூதியத்தில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், வளர்ப்புற நூலகர்கள், எம்ஆர்பி செவிலியர்கள் ஆகியோர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது. இவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சிஐடியூ சார்பிலும் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து பேசினர்.

Tags : Government employees ,
× RELATED கடும் வெப்ப அலைவீச்சிலிருந்து தூய்மை பணியாளர்களை பாதுகாக்க வேண்டும்