சென்னை: திருப்பரங்குன்றம் தொகுதிக்கு 2019ல் இடைத்தேர்தல் நடந்தபோது, அமமுக வேட்பாளர் மகேந்திரன், வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற போது தேர்தல் நடத்தை விதிகளை மீறி தற்போதைய திமுக எம்.பி. தங்கதமிழ் செல்வன் உள்பட 15 பேருடன் சென்றதாக திருநகர் போலீசார், மகேந்திரன், தங்கதமிழ்செல்வன் உள்ளிட்ட 15 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தங்கதமிழ்ெசல்வன் தாக்கல் செய்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக 2022ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கும் பிரிவுகளில் பதியப்பட்ட இந்த வழக்கில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று தங்கதமிழ்செல்வன் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தாமதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி மதுரை நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
