ஆண்டிபட்டி, பிப். 5: ஆண்டிபட்டி அருகே, சக்கம்பட்டியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உள்ளனர். இவர்கள், 50 சதவீத கூலி உயர்வு, 20 சதவீத போனஸ், அரசு நூல் விலை உயர்வை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஒரு மாதமாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், விசைத்தறி உரிமையாளர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், நேற்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதேபோல் டி.சுப்புலாபுரத்திலும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, 3வது நாளாக நேற்று வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டம் தொடரும், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் விசைத்தறி தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.