×

காதலர் தினத்தையொட்டி கவிஞர் வைரமுத்து, மநீம தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் வாழ்த்து!

சென்னை: காதலர் தினத்தையொட்டி கவிஞர் வைரமுத்து, மநீம தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கமல்ஹாசன்: “ஒருவர் பால் ஒருவர் கொள்ளும் காதல் தொடரவும், அனைத்தின் பால் காதல் வளரவும் வாழ்த்துகள். அன்பு காதலாக, காதல் அன்பாக மாறவும் வாழ்த்துகள். இவை அனைத்தும் செய்ய இன்றொரு நாள் போதுமா?” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

வைரமுத்து: காதல் எனும் உயிர்ப்பண்பு ஆண் பெண் மாமிசத்தோடு மட்டும் சம்பந்தப்பட்டதில்லை. எல்லா நிலைகளிலும் எல்லா வயதினிலும் அது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. ‘பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே’ என்று சங்கத் தலைவி பாடுமிடத்து உடற்புணர்ச்சி காதலாகிறது. ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி’ என்று பாடும்பொழுது கடவுள் பக்தி காதலாகிறது. ‘காதல் திருமகன்’ என்று தசரதன் தளும்புகிறபோது பாசம் காதலாகிறது. உதடுகளை மாற்றி மாற்றி முத்தங்கள் பயணப்படுவதுபோல் இதயங்களை மாற்றி மாற்றிக் காதல் பயணப்படுகிறது. மனிதர் உள்ளவரை மட்டுமல்ல இடம் பெயரும் உயிர்கள் உள்ளவரை காதல் இருக்கும். உடலோடு தொடங்கி உடல் தாண்டி உயிரில் ஐக்கியமாகிறபொழுது காதல் தன் புனிதயாத்திரையில் பூரணம் பெறுகிறது. எல்லாக் காதலுக்கும் இது நேர்வதில்லை. இன்று விற்பனையாகும் 250 மில்லியன் ரோஜாக்களும் குழல் சேர்வதில்லை. ஆனாலும் ரோஜாக்கள் பூக்கவே பூக்கும்; ஆனாலும் காதல் மலரவே மலரும். காதலைத் தடுக்க நாம் யார்? தானாய்த் தோன்றித் தானாய் மறையும் சந்திர சூரியர் போன்றது காதல். வாழ்க காதலே;
பூமியை வாழவை” என எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags : Poet Vairamuthu ,Manima Leader ,Kamal Hassan ,Valentine's Day ,Chennai ,Maneema ,Kamalhassan ,
× RELATED சென்னையில் நடிகர் மன்சூர் அலிகான்...