பள்ளிபாளையம், பிப்.2: பள்ளிபாளையம் வட்டாரத்தில், இந்தாண்டு 4,183 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 25 சதவீதம் தற்போது அறுவடையில் உள்ளது. இந்த மாத இறுதிவரை அறுவடை தொடர்ந்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய எலந்தகுட்டை பொன்காளியம்மன் கோயில் வளாகத்தில், நேற்று நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு உள்ளது. கலெக்டர் மெகராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில், மின்துறை அமைச்சர் தங்கமணி பங்கேற்று கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து பேசினார். பள்ளிபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் கலைச்செல்வி குத்துவிளக்கேற்றினார்.
நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குனர் அசோகன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் செந்தில், ஆர்டிஓ மணிராஜ், தாசில்தார் தங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புதிதாக திறக்கப்பட்டுள்ள கொள்முதல் நிலையத்தில், முதல்தர நெல் குவிண்டாலுக்கு ₹1,958, சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு ₹1,918 வழங்கப்படுகிறது. விவசாயிகள் தங்கள் நிலத்தின் பட்டா, சிட்டா மற்றும் அடங்கல் நகலை கொண்டு விஏஓவிடம் சான்று பெற்று, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகலுடன், கொள்முதல் நிலையத்துக்கு நெல்லை விற்பனைக்கு கொண்டுவரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.