டெல்லி: இந்த வார தொடக்கத்தில் இந்தியா -அமெரிக்கா இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதைத் தொடர்ந்து, எந்த நாட்டிலிருந்தும் எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு சுதந்திரம் உள்ளது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது . இந்தியாவுக்கு ரஷ்யா மட்டுமே கச்சா எண்ணெய் சப்ளையர் அல்ல என்றும், அதன் கச்சா எண்ணெய் சப்ளையர்களை பல்வகைப்படுத்த இந்தியா எடுத்த முடிவில் புதிதாக எதுவும் இல்லை என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
உலகளாவிய வர்த்தக தரவு வழங்குநரான கெப்ளரின் கூற்றுப்படி, டிரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத தண்டனை வரிகளை விதித்த பிறகும், இந்தியா ஒரு நாளைக்கு சுமார் 1.5 மில்லியன் பீப்பாய்கள் ரஷ்ய கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது . ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவதில் இந்தியா இரண்டாவது பெரிய நாடாகும், இது ஒட்டுமொத்த இந்திய இறக்குமதியில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமாகும்.
“இந்தியாவிற்கு எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை ரஷ்யா மட்டுமே வழங்குவதில்லை என்பதை நாங்கள், மற்ற அனைத்து சர்வதேச எரிசக்தி நிபுணர்களுடன் சேர்ந்து நன்கு அறிவோம். இந்தியா எப்போதும் மற்ற நாடுகளிலிருந்து இந்த பொருட்களை வாங்கியிருக்கிறது. எனவே, இங்கு புதிதாக எதையும் நாங்கள் காணவில்லை,” என்று ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார்.
2021 வரை இந்தியா இறக்குமதி செய்த மொத்த கச்சா எண்ணெயில் ரஷ்ய எண்ணெய் வெறும் 0.2 சதவீதமாகவே இருந்தது. இருப்பினும், பிப்ரவரி 2022-ல் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து, மேற்கத்திய நாடுகள் மாஸ்கோவைத் தவிர்த்தபோது, உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளரான புது டெல்லி, தள்ளுபடி விலையில் கிடைக்கும் ரஷ்ய கச்சா எண்ணெயின் மிகப்பெரிய வாங்குபவராக மாறியது.
