×

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ அறிக்கை

தூத்துக்குடி, பிப்.2: தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் வரும் 5ம் தேதி நட்டாத்தி ஊராட்சி பட்டாண்டிவிளையில் நடைபெறும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாக பங்கேற்று திமுக தலைவர் ஸ்டாலினிடம் கோரிக்கை மனுக்களை அளித்திடவேண்டும் என்று தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதாராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: உங்கள் தொகுதியில் ஸ்டாலின் எனும் நிகழ்ச்சி மூலமாக 234 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள பொதுமக்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார். அதோடு, சட்டமன்ற தொகுதி வாரியாக பொதுமக்களிடம் கலந்துரையாடல் மேற்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளையும் விளக்கிக்கூறி அதனை நிறைவேற்றுவதற்கான உறுதியினையும் அளித்து வருகிறார்.

இதன்படி, தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் வரும் 5ம் தேதி(வெள்ளி) மதியம் ஒரு மணிக்கு வைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேய்க்குளம்-பெருங்குளம் மெயின் ரோட்டிலுள்ள நட்டாத்தி ஊராட்சியான பட்டாண்டிவிளையிலுள்ள மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெறுகிறார். எனவே, திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், வைகுண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பொதுமக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், வர்த்தகர்கள் அமைப்புகளை சேர்ந்தவர்கள், தொழில் முனைவோர், மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள், இளைஞர்கள், மகளிர்கள் என அனைத்து தரப்பினரும் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நேரடியாக கோரிக்கை மனுக்களை வழங்கிட கேட்டுக்கொள்கிறோம். இந்தநிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணிகளின் மாநில நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழுஉறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் நிர்வாகிகள், சார்புஅணிகளின் மாவட்ட மற்றும் அனைத்து நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் அனைவரும் திரளாக பங்கேற்றிடவேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : Stalin ,constituency ,Anita Radhakrishnan MLA ,
× RELATED கடும் நிதி நெருக்கடியிலும்...