புதுக்கோட்டை, பிப். 4: சத்துணவு அங்கன்வாடி பணியாளருக்கு கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சத்துணவு அங்கன்வாடி பணியாளருக்கு இளநிலை உதவியாளர் நிலையில் ரூ.19,500ம், சமையல் உதவியாளருக்கு அலுவலர் உதவியாளர் நிலையில் ரூ.15,700ம் அடிப்படையில் கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும், அரசு பணியிடங்களை நிரப்பும்போது பத்து ஆண்டு பணி முடித்த தகுதியுள்ள சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களை 50 சதவீதம் உயர்த்திட வேண்டும்,
சத்துணவு அங்கன்வாடி திட்டங்களில் உள்ள 60,000 மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
