×

தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கொள்ளையடிக்க முயன்ற 2 வாலிபர்கள் கைது

திருமங்கலம், பிப்.2: துரை மாவட்டம், கள்ளிக்குடியில் டி.கல்லுப்பட்டி ரோட்டில் தனியார் பைனான்ஸ் நிறுவனம் உள்ளது. இதன் அருகே ஒரு டிபார்ட்மண்டல் ஸ்டோர் உள்ளது. கடந்த மாதம் 26ம் தேதி இரவு டிபார்ட்மண்டல் ஸ்டோர் கதவை 2 மர்மநபர்கள் உடைக்க முயற்சி செய்தனர். அது முடியாததால் அருகில் இருந்த தனியார் பைனான்ஸ்  நிறுவன கதவை உடைத்து உள்ளே சென்று லாக்கரை உடைக்க முயன்றனர். அப்போது வங்கியின் அலாரம் அடிக்கவே, அவர்கள் முயற்சியை கைவிட்டு  டூவீலரில் தப்பிச் சென்றனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த கள்ளிக்குடி போலீசார், அந்த பகுதியில் அமைந்துள்ள சிசிடிவி காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். எஸ்பி சுஜித்குமார் உத்தரவுபடி திருமங்கலம் டிஎஸ்பி விநோதினி மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடிவந்தனர்.
 இந்நிலையில் காரியாபட்டி - கள்ளிக்குடி ரோட்டில் மருதங்குடி அருகே வாகன தணிக்கையில் இருந்த போலீசாரிடம் இரண்டு வாலிபர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கொள்ளையில் ஈடுபட முயன்ற நபர்களின் போட்டோக்களை வைத்து ஆய்வு செய்த போது அவர்கள் தான் எனத் தெரிய வந்தது.

விசாரணையில் அவர்கள், ராமநாதபுரம் மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள தஞ்சாகூரை சேர்ந்த ராம்குமார்( எ) பாயாசம்(20), மதுரை சோலையழகுபுரத்தை சேர்ந்த கார்த்தி(எ)வெள்ளை கார்த்தி(20) என்பதும் தெரியவந்தது. இதில் வெள்ளை கார்த்தி விருதுநகர் மாவட்டம் சிவாசியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார் என்று தெரியவந்தது. ராம்குமார் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் இருவரையும் ரிமாண்ட் செய்தனர்.

Tags : teenagers ,accounting firm ,
× RELATED திருவொற்றியூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் 2 பேர் சடலமாக மீட்பு