தஞ்சை, ஜன .30: குடியரசு தினத்தில் டிராக்டர் ஊர்வலத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும், வழக்குகளை கைவிட வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் வலியுறுத்தியுள்ளார் .
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வேளாண் சட்டங்களை கைவிடக்கோரி, கந்த 26ம் தேதி குடியரசு தினத்தில் தமிழ்நாட்டில் டிராக்டர் ஊர்வலம் நடத்த அனைத்திந்திய உழவர்கள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு முன் வந்தது. அந்த பேரணிகளுக்கு அரசு தடை விதித்தது ஜனநாயக மறுப்பாகும். குடியரசு தினத்தன்று அனைத்திந்திய போராட்டக் குழுவினரின் பேரணிகளை காவல்துறையினரை வைத்து அயல்நாட்டு ராணுவத்தை எதிர்ப்பது போல் தமிழ்நாடு அரசு முரட்டுத்தனமாக எதிர்த்தது கண்டனத்திற்குரிய செயலாகும். அத்துடன் அப்பேரணிகளில் கலந்து கொண்ட சிலரை கொலை முயற்சி பிரிவு உள்ளிட்ட தண்டனை சட்டப் பிரிவுகளில் தளைப்படுத்தி, சிறையில் அடைத்திருப்புது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு முதலமைச்சர் உழவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் கைவிட வேண்டும், சிறையில் உள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.