×

பூரண வாழ்வை அருளும் தைப்பூசம்

தைப்பூசம் 1.2.2026

1. முன்னுரை

தமிழ் மாதங்கள் 12 ஒவ்வொரு மாதமும் சிறப்புடையது தான். சில மாதங்களின் பெருமை, மக்கள் வழங்கும் சொல் வழக்குகளால் புரிந்து கொள்ளுகின்றோம். சித்திரை மாதம் சீருடையோர் கல்யாணம், வைகாசி மாதம் வரிசையுள்ள கல்யாணம்,ஆடிக்காற்றில் அம்மியும் நகரும், ஆடிப்பட்டம் தேடி விதை, ஐப்பசி அடை மழை, மாசி கயிறு பாசி படியும், பங்குனி போய் சித்திரை வந்தால் பத்திரிகை அடித்து விடலாம், ஆனி மாதம் கொரடு போட்டால் அடுத்த மாதம் மழையில்லை, ஆடி விதைப்பு ஆவணி முளைப்பு, புரட்டாசியில் பொன் உருகக் காயும், ஐப்பசியில் மண் உருகப் பெய்யும், கார்த்திகைக்குப் பின் மழையுமில்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை, தையில் வளராத புல்லும் இல்லை; மாசியில் முளையாத மரமும் இல்லை, இந்த வரிசையில் தை மாதத்திற்கு ஒரு அற்புதமான சொல் வழக்கு ஒன்று ‘‘தை பிறந்தால் வழி பிறக்கும்”

2. தை பிறந்தால் வழி பிறக்கும்

தை மாதம் என்பது நற்செயல்களைத் தொடங்குவதற்காக காத்துக் கொண்டிருக்கும் மாதம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று ஏன் சொன்னார்கள்? வழி என்பதற்குப் பல பொருள்கள் உண்டு பாதை, வெளிச்சம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். பொதுவாகவே தெற்கு என்பது இருளைக் குறிக்கும் சொல்லாகவும், வடக்கு என்பது வெளிச்சத்தைக் குறிக் கும் சொல்லாகவும் பயன்படுத்துகிறோம். தட்சிணாயணம், உத்திராயணம் என்று வருடத்தில் இரண்டு பகுதிகள் உண்டு.

அதில் தட்சிணாயணம் என்பது தெற்கு வழிப் பாதையாகவும், உத்திராயணம் என்பது சூரியனின் வடக்குவழி பாதையாகவும் இருக்கிறது. தட்சிணாயினம் முடிந்து உத்திராயணத்தில் சூரியன் நுழையும் மாதம் தை மாதம் என்பதால் சூரியனுக்கே வடக்கு வழி கிடைத்த மாதம் தை . சூரியன் நமக்கும் வாழ்க்கையில் வெளிச்சத்தைக் காட்டுவான் என்பதால் தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்றார்கள்.

3. சிறப்பான செயல்களுக்கு வழி கொடுக்கும் மாதம்

இப்படிப்பட்ட வழி கிடைத்துவிட்டது என்பதை குதூகலமாக கொண் டாடுவதற்காகத்தான் தை முதல் நாள் சூரியனுக்கு பொங்கல் வைத்து படைக்கிறோம். வானியல் ரீதியாக தை மாதம் என்பது பத்தாவது மாதம். பத்தாவது ராசி மகர ராசி. தனுசு ராசியில் இருந்து மகர ராசியில் சூரியன் தை மாதம் ஒன்றாம் தேதி நுழைவதால் மகர சங்கராந்தி என்று கொண்டாடுகிறோம். ஜோதிட ரீதியாக பத்தாவது ராசியை கர்ம ராசி, தொழில் ராசி, ஜீவன ராசி என்றெல்லாம் சொல்லுவார்கள்.

இந்த ராசி சிறப்பாக இருந்தால் ஒருவருடைய கர்மா அதாவது செயல்பாடு சிறப்பாக இருக்கும். செயல்பாடு சிறப்பாக இருந்தால், அவருடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இப்படிப்பட்ட சிறப்பான செயல்களுக்கு வழி கொடுக்கும் மாதம் என்பதால் தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொன்னார்கள்.

4. நெய் பூசும் தை பூசம்

தை மாதத்தில் பலவிதமான வழிபாடுகளைக் கொண்டாடுகிறோம். குறிப்பாக தையில் வரும் அமாவாசையும், பௌர்ணமியும் சிறப்பு.தை மாதத்தின் பௌர்ணமி தினம் பூச நட்சத்திரத்தில் சந்திரன் இருக்கும்போது வரும் என்பதால் தை மாதத்தின் பூச நட்சத்திர நாள் மிகச் சிறப்பான நாளாகக் கொண்டாடப்படுகிறது. ‘‘பூசத்தன்று பூனைகூட பழையதை உண்ணாது” என்பது தைப்பூச விரதத்தின் தீவிரத்தைக் குறிக்கும் பழமொழியாகும்.

‘‘நெய் பூசம் நறுமணம் போல் நிலமெங்கும் கொண்டாடும் தைப்பூசத் திருநாளை நீ பார்க்காமல் போய் விட்டாயே” பூங்காவாய் என்று ஞானசம்பந்தர் பாடுகின்றார். நட்சத்திரங்களில் பூச நட்சத்திரம் தனிச்சிறப்பு வாய்ந்த நட்சத்திரம். அது சனிக்கு உரிய நட்சத்திரம். சனி ஜீவனகாரகன், கர்ம காரகன். நாம் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்றவாறு நமக்கு அருள்பவன். எனவே சனியின் நட்சத்திரங்களான பூசம் அனுஷம் உத்திரட்டாதி இவை மூன்றும் மங்களமான நட்சத்திரங்களாக ஜோதிட சாஸ்திரத்தில் கொண்டாடப்படுகின்றன.

5. மோட்சம் தரும் பூசம்

பொதுவாக பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஞானம், கடின உழைப்பு, தாய்மை உணர்வு, மற்றும் குடும்ப பற்றுள்ளவர்களாக இருப்பார்கள். பூச நட்சத்திர நாள் களில் எல்லா விதமான சுபகாரியங்களையும் நாம் செய்யலாம். அது மட்டுமல்ல, இந்த நட்சத்திரங்கள் கால புருஷனின் 4, 8, 12 ஆகிய ராசிகளில் (கடகம்,விருச்சிகம், மீனம்) அமைந்திருக்கின்றன.

ஜோதிட சாஸ்திரத்தில் 12 ராசிகளை நான்கு விதமாகப் பிரித்து இருக்கிறார்கள். தர்ம திரிகோண ராசிகள், அர்த்த திரிகோண ராசிகள், காமத் திரிகோண ராசிகள், மோட்சத் திரிகோண ராசிகள் என்று வகுத்திருக்கிறார்கள் இதில் 4,8,12 திரிகோண ராசிகள் மோட்சத் திரிகோண ராசிகள். இந்த மோட்ச திரிகோண ராசிகளில் தான் பூச நட்சத்திரமும்
அமைந்திருக்கிறது.

6. பூசமும் முருகனும்

பூச நட்சத்திராதிபதி சனி. இதன் அதிதேவதை பிருகஸ்பதி என்ற வியாழ பகவான்,இதன் விருட்சம் அரச மரம். பூசம் எட்டாவது நட்சத்திரம்.எண் கணிதப்படி 8 என்பது சனியைக் குறிக்கும். சனி நீதி பரிபாலனத்தைக் குறிக்கும். பூச நட்சத்திரம் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது முருகன் ஆலயங்களில் நடைபெறும் தைப்பூசத் திருவிழாக்கள். காவடியாட்டம், பாதயாத்திரை, பால்குடம் அதற்குப் பிறகு நம்முடைய நினைவுக்கு வருவது வடலூர் வள்ளல் பெருமானின் தைப்பூச நிகழ்ச்சிகள் மூன்றாவதாக நமக்கு நினைவுக்கு வருவது சில குறிப்பிட்ட வைணவக் கோயில்களில் நடைபெறும் தைப்பூச உற்சவங்கள்.

இது தவிர அம்மன் ஆலயங்களிலும் தைப்பூச விழா விரிவாகக் கொண்டாடப்படுகிறது. குறிப்பாகச் சமயபுரம் மாரியம்மன் கோயில் போன்ற இடங்களில், 10 நாட்கள் திருவிழாவாகக் கொண்டாடப் படுகிறது; இதில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருவார், பால்குடம் எடுத்தல், காவடி, கற்பூரச்சட்டி போன்ற நேர்த்திக் கடன்களைச் செலுத்துவர், இந்த ஆண்டு தைப்பூச வைபவம் பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி (1.2.2026 ஞாயிறு) வருகிறது.

7. தையில் பிறந்த அருளாளர்கள்

தை மாதம் பலவகையில் சிறப்பு பெற்ற மாதம். ஆழ்வார்களில் திருமழிசை ஆழ்வார் தை மாதத்தில் தான் அவதரித்தார் .ஆசாரியர்களில் கூரத்தாழ்வார், குருகைக் காவலப்பன், சொட்டை நம்பி, திருக்கோவிலூர் எம்பெருமானார் ஜீயர், இவர்களெல்லாம் தை மாதத்தில் அவதரித்தவர்கள். நாயன்மார்களில் திருநீலகண்ட நாயனார், தாயுமானவசுவாமிகள், அப்பூதி அடிகள், கலிக்காம நாயனார், கண்ணப்ப நாயனார், சண்டிகேஸ்வர நாயனார் அரிவாட்டாய நாயனார் முதலியவர்கள் தை மாதத்தில் அவதரித்தவர்கள்.

8. பூசத்தில் பிறந்த அருளாளர்கள்

ராமாயணத்தில் ஆயிரம் ராமனுக்கு சமம் பரதன் என்ற பெருமை மிக்க பரதன் பிறந்த நட்சத்திரம் பூசம். ‘‘பூசமும் மீனமும் பொலிய நல்கினாள், மாசு அறு கேகயன் மாது மைந்தனை”என்பது கம்பன் வாக்கு.ராமனும் இலக்குவனும் சத்துருக்கனும் பிறந்த போது அந்தந்த நட்சத்திரங்கள் மட்டுமே மகிழ்வுற்றன. ஆனால், பரதன் பிறந்த போதுதான் எல்லா நட்சத்திரங்களும் மகிழ்வுற்றன என்பது கம்பன் கூற்று. கர்நாடகாவில் மைசூர் அருகே மேல்கோட்டை எனப்படும் திருநாராயணபுரத்தில் தை பூசம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும்.

ராமன் முடிசூட்டு விழாவைக் காண தசரதருக்குக் கிடைக்காத பேறு ராமானுஜருக்கு கிடைத்தது. வைரமுடி சேவை பங்குனி மாதம் புஷ்ய (பூச) நட்சத்திரத்தில் மிக விமர்சையாக அனுஷ்டிக்கப்படுகிறது. பக்தர்கள் பல்வேறு இடங்களிலிருந்து வருகின்றனர். இதைத் தவிர ராஜமுடி, (க்ருஷ்ண ராஜமுடி) சேவையும் கொண்டாடப்படுகிறது.

9. பூச நட்சத்திர பொங்கல்

பதவி ஏற்கவும், சபையைக் கூட்டவும், சீமந்தம் முதலிய விசேஷங்கள் செய்யவும், பசுமாடு வாங்கவும், வாஸ்து சாந்தி செய்யவும், திருமணம், கிரகப்பிரவேசம் முதலிய விசேஷங்களைச் செய்யவும், யாத்திரை மற்றும் வெளிநாடு பிரயாணம் செய்யவும் ஏற்ற நட்சத்திரம் பூசம் நட்சத்திரம். தை மாதம் முதல் நாள் இப்போது பொங்கல் பண்டிகை வைத்தாலும் கூட, ஒரு காலத்தில் தையில் அறுவடை செய்த புது நெல்லை, பூச நட்சத்திர நாளன்று பொங்கல் வைத்து கொண்டாடுகின்ற வழக்கமும் இருந்தது இது குறித்த பல குறிப்புகள் இலக்கியங்களில் இருக்கின்றன.

தையில் தான் பொங்கல் பண்டிகை வருகிறது. தையில் தான் வெள்ளிக்கிழமை விசேஷம். சைவத்தில் எல்லா அம்பாள் கோயில்களிலும் ,திருமால் ஆலயங்களில் எல்லா தாயார் சன்னதிகளிலும் தை வெள்ளிக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்படும். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு தைப்பூசம் கொண்டாடப்பட்டது குறித்து தேவாரப் பதிகங்களில் குறிப்புகள் உண்டு . குறிப்பாக பொருந்திய “தைப்பூசமாடி உலகம் பொலிவெய்த” என்று திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.

10. முருகனுக்கு ஏன் சிறப்பு?

தை மாதமாகிய மகர ராசியில் செவ்வாய் உச்சமடைகிறார். செவ்வாய் என்பது முருகப் பெருமானைக் காட்டும் கிரகக் குறியீடு. பெண் தெய்வமாக இருந்தால் துர்க்கையைக் குறிக்கும். அதனால்தான் தை மாதம் வெள்ளிக்கிழமை அம்பாளையும் பூசத்தில் முருகப் பெருமானையும் வணங்கி, எட்டாத இலக்கையும் எட்டுகின்றனர். சனியின் ஆதிக்கம் கடுமையாக இருக்கும்போது (ஏழரைச் சனி,அஷ்டமச்சனி, கண்டச் சனி ,அர்த்தாஷ்டம சனி) அதே சனி நட்சத்திரமான பூச நட்சத்திரத்தில் சனியின் மகர ராசியில் உச்சம் பெறும் முருகனை வணங்கி நிவாரணம் பெறுகின்றனர்.

11. எல்லாத் தெய்வங்களுக்கும் உரிய விழா

திருமயிலாப்பூரில் உள்ள கபாலீச்சரம் என்னும் கோயிலில் பொங்கல் படைத்து பூச நாள் கொண்டாடிய வரலாறு பின்வரும் தேவாரத்தால் அறிகிறோம்.
மைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச் சரமமர்ந்தான்
நெய்ப்பூசு மொண்புழுக்க னேரிழையார் கொண்டாடும்
தைப்பூசங் காணாதே போதியோ
பூம்பாவாய்.

12. அம்பாளுடன் ஆனந்த நடன தரிசனம் தந்த நாள்

மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தன்று, சிவன் தனித்து நடனமாடி, பக்தர்களை மகிழ்விப்பார், தைப்பூசத்தன்று, அம்பாளுடன் இணைந்து நடனமாடுவார். சைவத்தில் கோயில் என்றால் சிதம்பரத்தைக் குறிக்கும் சிதம்பரத்திற்கும் தைப்பூசத் திருநாளுக்கும் ஒரு இணைப்பு உண்டு. சிவபெருமான் உமா தேவியுடன் சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர். அது மட்டுமல்ல,சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, நடராஜரை இரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இந்நாளிலேயே. இக்காரணங்களுக்காகவே சிவன் கோயில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங் களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.

13. உலகெங்கும் தைப்பூசம்

தைப்பூசம் அன்று உற்சவங்கள் இல்லாத முருகப்பெருமான் கோயிலே இல்லை என்று சொல்லலாம். நம் நாட்டில் மட்டுமல்ல, வெளிநாட்டிலும் முருக பெருமான் கோயில்களில், தைப்பூச திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாட ப்படும். மலேசியா, சிங்கப்பூர் பினாங்கு, மத்திய ஐரோப்பா நாடுகள், மேற்கு ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து, அமெரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா முதலிய நூற்றுக்கணக்கான நாடுகளில் தைப்பூசத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படும். நாக்கு, கன்னம், கை, உடம்பின் பிற பகுதிகளில் சிறிய பெரிய வேல் வடிவமுடைய ஊசியால் குத்திக்கொண்டு கோயிலுக்கு வருதல். சிலர் சின்ன ரதம் போன்ற வண்டியை பக்தர்களின் முதுகில் கொக்கிகளால் இணைத்து இழுத்து வருகிறார்கள்.

14. பழனியில் தைப்பூசம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழநிக்கு திருவாவினன்குடி, சக்திகிரி என்று பெயர். முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று . பழனியில் தைப்பூசம் 2026, பிப்ரவரி 1 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது, காவடி, பால் குடம் ஏந்தி, தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள், குறிப்பாக தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பத்து நாட்கள் விழா சிறப்பாக நடைபெறும்.

தை பூசத்தன்று முருகன் தாருகாசுரனை வதம் செய்த நிகழ்வு பழனியில் அனுஷ்டிக்கப் படுகிறது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோயில் ஒரு மலைக் கோவிலாகும். மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணி. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான போகர் மூலவர் சிலையை நவபாஷாணத்தால் செய்து நிறுவியுள்ளார். இக்கோயிலில் தைப்பூசம் பத்து நாட்கள் நடைபெறும் .ஏழாம் நாள் விழாவில் தேரோட்டம் நடைபெறும். முருகன் வள்ளி தெய்வயானையுடன் திருமணக்கோலத்தில் ரதவீதிகளில் தேரில் பவனி வருவார்.. பத்தாம் நாள் தெப்போற்சவம் நடைபெறும்.

15. காவடி வகைகள்

தை பூசம் என்றாலே காவடி நினைவுக்கு வரும்.காவடி இல்லாத முருகன் விழாவா?காவடிக்கு ஒரு தத்துவம் உண்டு.காவடியின் இரு பாகங்களும் இன்ப துன்பங்களையும், பாவ புண்ணியங்களையும் குறிக்கும்; அவற்றின் நடுவில் உள்ள தடி பக்தியையும், வாழ்க்கையையும் குறிக்கிறது.

இந்தச் சுமைகளை முருகனிடம் ஒப்படைக்கிறோம்.உடல் வலியைப் பொருட்படுத்தாமல் காவடி சுமப்பது, உடலின் மீதான பற்றை விட்டு, மன உறுதியையும், ஆன்ம விடுதலையையும் குறிக்கிறது.நோய்கள் நீங்கியதற்கோ, வேண்டுதல்கள் நிறைவேறியதற்கோ நன்றி செலுத்தும் விதமாக தைப் பூசம் அன்று முருகப்பெருமானுக்கு எண்ணற்ற பக்தர்கள் காவடி எடுக்கிறார்கள். அந்த காவடியிலேயே எத்தனை எத்தனை வகைகள்?

1. சர்க்கரை காவடி – சர்க்கரை பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.

2. தீர்த்தக் காவடி – கொடுமுடியிலிருந்து (கரூர் மாவட்டம்) காவிரி தீர்த்தம் பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.

3. பறவைக் காவடி – அலகு குத்தியவர் தொங்கியவாறு ஒரு வாகனத்தில் அழைத்து வரப்படுகிறார்.

4. பால் காவடி – பால்குடம் காவடியாக பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.

5. மச்சக்காவடி – மீன் நீருடன் பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.

6. மயில் காவடி – மயில் தோகையால் அலங்கரிக்கப்பட்ட காவடி பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது. இது தவிர சர்ப காவடியும் உண்டு. நம் நாட்டில் மட்டுமல்ல வெளிநாட்டிலும் காவடி எடுத்துக் கொண்டு முருகனின் பாடல்களைக் பாடிக் கொண்டு, அற்புதமான நாதஸ்வர இசையோடு வருவது மனதை உருக்கும். அதுதான் தைப்பூசம்.

16. திருத்தணியில் தைப்பூசம்

தைப்பூசத் திருநாளில், வேல் பூஜை செய்வதும் வேலுக்கு அபிஷேகங்கள் செய்வதும் வேலுக்கு செவ்வரளி கொண்டு அர்ச்சித்து வழிபாடுகள் மேற்கொள்வதும் உன்னதமான பலன்களைக் கொடுக்கவல்லது. திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருத்தணி. ஆறுபடை வீடுகளில் ஐந்தாம்படை வீடு. நக்கீரரின் திருமுருகாற்றுப்படையிலும், அருணகிரி நாதர் திருப்புகழிலும் பாடிய தலம். முத்துசாமி தீட்சிதர் இந்தத் தலத்து முருகப்பெருமானை போற்றிக் கீர்த்தனை பாடியிருக்கிறார்.

இங்கு தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். விழாவை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படும். தங்க கவசம், வைர கீரிடம், பச்சைக்கல் மரகத மாலை அணிவிக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் செய்யப்படும். பக்தர்கள் விரதமிருந்து உடலில் அலகு குத்தியும், காவடிகள் சுமந்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்துவர். அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிவர்.

17. திருச்செந்தூர் தைப்பூசம்

தைப்பூச நன்னாளில், முருகக் கடவுளுக்கு கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வதும் அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாராயணம் செய்வதும் எதிர்ப்புகளைத் தவிடு பொடியாக்கித் தரும். எதிரிகளை பலமிழக்கச் செய்யும். தைப்பூச நன்னாளில் அருகிலுள்ள முருகன் கோயிலுக்கு அவசியம் சென்று தரிசியுங்கள். முடிந்தால் அறுபடை வீடு ஒன்றுக்கு செல்லுங்கள். முருகப் பெருமான் சூரசம்ஹாரம் செய்த கடற்கரைத் தலமான திருச்செந் தூரிலும் தைப்பூசம் விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது.

தை மாதம் நடைபெற இருக்கும் தைப்பூச நிகழ்வுக்காக மார்கழி மாதம் முதலே பக்தர்கள் மாலை அணிந்து விரத மிருந்து பாதயாத்திரையாக செந்தூர் நோக்கி படையெடுக்கின்றனர். திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் முதலிய அருகாமை மாவட்டங்களின் ஆயிரக்கணக்கான ஊர்களில் இருந்து சாரி சாரியாகத் திருச்செந்தூர் நோக்கி, கால்நடையாக, பாடல்களைப் பாடிக் கொண்டே செல்லும் மக்கள் வெள்ளம் காணக் கிடைக்காத பரவசக் காட்சி. கொடியைப் பிடித்துக் கொண்டு, காலில் பாத அணி அணியாது, கிடைத்த வண்டிகளில் முருகப் பெருமானை அலங்கரித்து வைத்து, பாட்டு பாடிக்கொண்டே அவர்கள் செல்லுகின்ற பொழுது, உள்ள உணர்வு மற்ற மக்கள் மனதிலும் தைப்பூசத் திருநாளின் அதிர்வலைகளை ஏற்படுத்தும்.

18. இலங்கையில் தைப்பூசம்

சுவாமிமலை, திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, மயிலம், எண்கண், எட்டுக்குடி, சிக்கல், மருதமலை முதலிய பல்வேறு முருகன் தலங்களில் மிக விரிவாக தைப்பூசம் கொண்டாடப்படும். தைப்பூசத்தில் தான் யாழ்ப்பாண மக்கள் புதிர் எடுப்பர். அதிகாலையில் எழுந்து வீடு வாசலைச் சுத்தம் செய்து வீட்டில் இருக்கும் ஆண்கள் நெல்லறுக்கும் அரிவாள், தேங்காய், கற்பூரம், கத்தி, கடகம் என்பவற்றுடன் வயலுக்குச் சென்று கிழக்கு முகமாக நின்று, சூரியனை வணங்கி, ஒருவர் தேங்காய் உடைக்க மற்றவர் முற்றிய புது நெற்கதிர் சிலவற்றை அறுத்து வீட்டிற்கு எடுத்து வருவர். அதனை பூஜை அறையில் வைத்து, அதில் இருந்து சில நெல்மணிகளை எடுத்து உமியை நீக்கி அந்த அரிசியைப் பசும்பாலுடன் கலந்து வாழைப் பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி பூஜை செய்து உண்பர். முருகன் கோயில்களில் பால் குடம் எடுத்தும் காவடி எடுத்தும் தத்தம் நேர்த்திகளை நிறைவேற்றுவர்.

19. மலேசியாவில் தைப்பூசம்

மலேசியாவில் கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ளது பத்து மலை முருகன் கோயில். இது ஒரு மலைக் கோயில்; சுண்ணாம்புப் பாறைகளாலானது. மலையை ஒட்டி சுங்கை பத்து ஆறு ஓடுகிறது. பத்து கோயில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்து மலையில் குவிகிறார்கள். தைப்பூச நன்னாளில் பக்தர்கள் கோலாலம்பூர் மாரியம்மன் கோயிலிருந்து பத்து மலைக்கு ஊர்வலமாக நடந்து வருகிறார்கள்.

மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஜோர்ஜ் டவுன் மாநகர அருகில் உள்ள தண்ணீர் மலை கோயிலில் பினாங்கு தைப்பூசம் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூசத் திருநாளை பினாங்கு மாநில அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. மலேசி யாவில் ஈப்போ அருகில் குனோங் சீரோ என்னுமிடத்தில் அமைந்துள்ள ஸ்ரீசுப்பிரமணியன் கோயிலில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

20. திருவிடைமருதூர்

எல்லாச் சிவத்தலங்களிலும் தை பூசம் கொண்டாடப்பட்டாலும் நமக்கு உடனடியாக நினைவுக்கு வருவது தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகே அமைந்துள்ள திருவிடைமருதூர் தான். இத்தலத்தில் உள்ள இறைவன் சுயம்பு லிங்க மூர்த்தியாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.

வருந்திய மாதவத்தோர் வானோரேனோர் வந்தீண்டிப்
பொருந்திய தைப்பூச மாடியுலகம் பொலிவெய்தத்
திருந்திய நான்மறையோர் சீராலேத்த விடைமருதில்
பொருந்திய கோயிலே கோயிலாகப் புக்கீரே.

விரதங்களால் மெய்வருந்திய மாதவத்தோர் வானவர் ஏனோர் வந்து கூடித்தைப்பூச நாளில் காவிரியில் பொருந்தி நீராடி உலகவரோடு தாமும் மகிழுமாறும் திருத்தமான நான்மறைவல்ல அந்தணர்கள் முறையால் ஏத்தவும் இடைமருதில் பொருந்தியுள்ள கோயிலையே இருப்பிடமாகக் கொண்டுள்ளீர் என்பது தேவாரம்.

21. நான்கு நாட்கள் நடக்கும் கூத்துகள்

வரகுண பாண்டியன் என்ற பாண்டிய நாட்டு அரசன் வேட்டையாடச் சென்ற போது, ஒருமுறை மாலை நேரம் முடிந்து இரவு தொடங்கி விட்டது. அரசன் குதிரை மீதேறி வரும் வழியில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு அந்தணன் மீது குதிரை ஏறியது.அவன் இறந்து விட்டான். அந்தணனைக் கொன்ற அரசனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. சிவபக்தனான வரகுண பாண்டியன் மதுரை சோமசுந்தரரை வணங்க அவர் திருவிடைமருதூர் சென்று வழிபடும்படி கூறினார்.

எதிரி நாடான சோழ நாட்டுக்கு எப்படிச்செல்வது? இறைவன் வழிகாட்ட மாட்டானா என்ன? சோழ மன்னன் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்து வந்தான். வரகுண பாண்டியன் சோழ மன்னனை போரில் தோற்கடித்து சோழநாடு வரை துரத்திச் சென்றான். அப்போது திருவிடைமருதூர் சென்றான். கிழக்கு கோபுர வாயில் வழியாக நுழைந்தான். பிரம்மஹத்தியும் அந்தணனின் ஆவியும் அரசனைப் பின்பற்றிச் சென்றது. ஆனால் கோயிலினுள் செல்ல முடியவில்லை.

22. சகல தோஷங்களும் நீக்கும் தைப்பூசம்

அரசன் திரும்பி வரும்போது பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தன. திருவிடைமருதூர் இறைவனோ வரகுண பாண்டியனை மேற்கு வாயில் வழியாக வெளியேறிச் செல்லும்படி ஆணையிட்டு அருள் புரிந்தார். அரசனும் பிரம்மஹத்தி நீங்கியவனாக பண்டியநாடு திரும்பினான். இதை நினைவுகூறும் வகையில் இன்றளவும் இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள் பிரதான கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்று மேற்கிலுள்ள அம்மன் சந்நதி கோபுரவாயில் வழியாக வெளியே செல்லும் முறையைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.

தை பூசத்தில் திருவிடைமருதூர் ஈஸ்வரனை வணங்க, பொல்லாத பாவங்களும் நில்லாது தீரும். சோழர் ஆட்சியில் திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயிலில் தைப்பூசத்தை ஒட்டி நான்கு நாட்கள் கூத்துகள் நடந்ததாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள செல்வ முத்துக்குமார சுவாமிக்கு தைப்பூசத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது; பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து வழிபடுவார்கள். பால், பன்னீர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் போன்ற 108 திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெறும்.

23. வள்ளலாரும் தைப்பூசமும்

தைப்பூசம் என்றாலே அடுத்து நமக்கு நினைவுக்கு வருவது வள்ளலார். “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய” வள்ளலார். “அருட் பெரும் ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி” என்று பாடிய வள்ளலார்.இந்தியாவில் ஆயிரக்கணக்கான வள்ளலார் மன்றங்கள் இயங்குகின்றன. சிறு வள்ளலார் கோயில்கள் இயங்குகின்றன. அத்தனைக் கோயில்களிலும் தைப்பூசத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு அன்னதானம் நடத்தப்படும்.

24. வடலூரில் அன்னதான விழா

வள்ளலாரின் மிகப்பெரிய தத்துவம்
1. ஜீவகாருண்ய ஒழுக்கம்.
2. தனி மனித ஒழுக்கம்
3. உயிர்கள் இடத்தில் அன்பு.

4. செய்யவேண்டிய தொண்டில் மிகச் சிறந்த தொண்டு மனித குலத்தின் பசியைப் போக்குதல். புத்தரைப் போலவே ஒருவனுக்கு பசி இருக்கும் வரை அவனிடத்திலே எந்த ஆன்மிக எண்ணமும் எழுவதற்கு வழி இல்லை என்று கண்டவர் வள்ளலார். எல்லாப்பிணிகளுக்கும் மூல காரணம் பசிப்பிணி தான் என்பதை எடுத்துச் சொன்ன வள்ளலார் கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு ஜனவரி மாதம் தைப்பூசத் திருநாளில் தான் சத்திய ஞான சபையைத் தொடங்கினார் ஏழு திரைகளை விளக்கி ஜோதி தரிசனத்தை காட்டும் உன்னத விழாவான தைப்பூச திருவிழா வடலூரில் பெரு விழாவாகக் கொண்டாப்பட்டு வருகிறது.

25. ஜோதி தரிசனம்

அருட் பெருஞ்சோதி, தனிப்பெருங்கருணை என்றும் முழக்கமிட்டுப் பாடிய வள்ளலார் தோற்றுவித்த வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்தியஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா சிறப்பு வாய்ந்தது. இறைவனை ஒளி வடிவமாகப் போற்றிய வள்ளலார் சத்திய தருமச்சாலைக்கு அருகில் ஒரு ஒளித் திருக்கோயிலை கட்டினார். அங்குதான் 25.1.1872, தை மாதம் 13ஆம் நாள் தைப்பூசத் தினத்தன்று முதல் ஜோதி தரிசனம் செய்யும் வழிபாட்டு விழா நடைபெற்றது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மனிதத் தன்மை என்ற ஒப்பற்ற ஒளி இருக்கிறது.

ஆனால், ஆசை, கோபம், தன்னலம். பொய்மை போன்ற பொல்லாத குணங்கள் பல்வேறு திரைகளாகப் படர்ந்து, அந்த மனிதத் தன்மையை அமுக்கி மறைத்து விடுகிறது. இந்தப் பொல்லாத குணங்கள் விலகி, நல்ல நெறியை அடையும்போது மனிதன் தனக்குள் இருக்கும் தெய்வத்தைக் காண்கிறான். ஜோதி தரிசனகாட்சி என்பதும் இது போலத்தான்.

26. ஏழு வண்ணத் திரைகள்

சத்திய ஞான சபையில் உள்ள ஏழு திரைகள், மனித ஆன்மாவை மறைக்கும் மாயத் திரைகளே ஆகும்; ஏழு திரைகளை நீக்கிய பிறகுதான் தீபத்தின் ஜோதி ஒளியைக் காண இயலும். கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன்னிறம், வெண்மை, கலப்பு வண்ணம் என ஏழு வண்ணத் திரைகள். அதனால் தான் இன்றும் ஒளிக்காட்சி முன்பு ஏழு வண்ணத் திரைகள் விலக்கப்படுகிறது. ஜீவகாருண்யம் மற்றும் அருள் வழியே அருட் பெருஞ்ஜோதியை உணர்ந்து மரணமில்லாப் பெருவாழ்வு அடையலாம் என்பதே தத்துவம். மனிதர்களின் ஆன்மாவில் உள்ள அறியாமை, ஆணவம், கன்மம் போன்ற தடைகளைக் குறிக்கும் ஏழு மாயத் திரைகள் இவை. இவற்றை நீக்குவதே சன்மார்க்கத்தின் நோக்கம்.

27. வல்லக்கோட்டையில் தைப்பூசம்

செங்கல்பட்டில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழியில், ஸ்ரீபெரும்புதூருக்கு முன்னதாக 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வல்லக்கோட்டை திருத்தலம். சுமார் 1200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆலயம் என்று போற்றப்படுகிறது.அருணகிரிநாதர் இந்தத் தலத்து முருகப்பெருமான் குறித்து ஏழு திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்.வல்லகோட்டை முருகப்பெருமான் கோயிலில், ஏனைய விழாக்கள் விமரிசையாகக் கொண்டாடப்பட்டாலும் தைப்பூசத் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. இந்தநாளில், ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து வேண்டிக்கொள்கின்றனர். பால் காவடி எடுத்தும் அலகு குத்தியும் வழிபாடுகள் செய்கின்றனர். இங்கே உள்ள முருகப் பெருமான். மூலவராக சுமார் ஏழடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறார்.

28. பல்வேறு கோணங்களில் தைப்பூசம்

தைப்பூசம் என்பது பல்வேறு கோணங்களில் சிறப்பு மிக்கது. விரிந்த பிரபஞ்சத்தில் நம்முடைய சூரிய மண்டலம் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியது. சூரியனிலிருந்து நாம் வாழும் உலகம் உட்பட பல்வேறு கிரகங்கள் தோன்றின. சூரியனைச் சுற்றி பல்வேறு கோள்கள் இருந்தாலும் தாவரம் தொடங்கி மனித உயிர்கள் வரை கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழத் தகுதியான இடமாக இந்த உலகம் அமைந்திருக்கிறது.

வேறு எந்தக் கிரகத்திலும் இந்த அமைப்பு இல்லை. ஒரு இடத்தில் உயிர் வாழும் தகுதி இருக்கிறதா என்பதை சோதிப்பதற்கு அங்கே நீர் இருக்கிறதா என்பதை சோதிப்பார்கள். ஆக உயிர்களின் தோற்றம் அடிப்படை நீர். தைப்பூச திருநாளில் தான் உலகம் முதல் முறையாக நீரும் நீரிலிருந்து மற்ற ஜீவராசிகளும் தோன்றியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டு இருப்பதால் உயிர்களின் உருவாக்கத்திற்கு காரணமான நாள் தைப்பூச நாள்.

29. முருகனுக்கு உரிய நான்கு தினங்கள்

முருகப் பெருமானுக்கு 365 நாள்களும் விசேஷம் என்றாலும் ஐந்து தினங்கள் அதி விசேஷம். ஒன்று அவர் அவதரித்த வைகாசி விசாகம். சிவபெருமான் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு சுடர்களான அவதாரம் செய்த முருகப்பெருமான், சக்தியின் துணையால் ஒரே உருவமாக மாறியது கார்த்திகை திருநாள் அதனால் அவருக்கு கார்த்திகேயன் என்கின்ற பெயர்.

எனவே, கார்த்திகை நட்சத்திரமும் கிருத்திகை விரதமும் முருகனுக்கு உரியது. மூன்றாவதாக ஐப்பசியில் வரும் சஷ்டி திதி. சூரசம்காரம் நடை பெறும் ஐப்பசி மாத சஷ்டி விசேஷம். நான்காவதாக வள்ளியைத் திருமணம் புரிந்து கொண்ட பங்குனி உத்திரத் திருநாள் முருகனுக்கு உகந்த நாள். எல்லாவற்றுக்கும் மேலாக பராசக்தி இடம் வேல் வாங்கி வேலாயுதசாமி என்னும் திருப்பெயரோடு தரகாசூரனை வதம் செய்த நாள் தைப்பூசம். ஸ்ரீபெரும்புதூரில் ஸ்ரீராமானுஜருக்கு தை பூசத்தில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும். புறப்பாடு நடைபெறும். இதனை குரு புஷ்ய உற்சவம் என்பார்கள். தடைபட்ட திருமண பேச்சை தொடங்குவதற்கு தைப்பூச நாள் உகந்த நாள். இந்த நாளில் வள்ளியை முருகப் பெருமான் திருமணம் புரிந்து கொண்டதால் இந்த நாளில் வைக்கப்படும் மங்கலப் பிரார்த்தனைகள் நிறைவேறும்.

30. தை மாத வெள்ளிக்கிழமை

தை மாத வெள்ளிக்கிழமைகள், குறிப்பாக முதல் வெள்ளி, மகாலட்சுமி, பராசக்தி அம்மன் வழிபாடு செய்ய விசேஷமான நாட்கள்; செல்வ வளம், குடும்ப ஒற்றுமை, மன அமைதி, ஆசைகள் நிறைவேற வழிபடுவர்; இந்நாளில் அம்பாள் கோயில்களுக்குச் சென்று வழிபடுவது மிகவும் நன்மை தரும், ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று தான் வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒளியானார்.

வடலூருக்கு அருகில் உள்ள மேட்டுக் குப்பத்தில், தைப்பூசத்தன்று லட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள். வள்ளலார் இராமலிங்க அடிகளார் தை பூச நாளை ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார்கள். இப்படிப் பல சிறப்புகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

எஸ். கோகுலாச்சாரி

 

Tags : Chitra ,Viagasi ,Adikatar ,
× RELATED அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி