×

திண்டுக்கல் பஸ்களில் தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன்களை ஆர்டிஓ பறிமுதல் செய்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு மாத விழா நடைபெற்று வருகிறது. அதன்படி ஒலி மாசு ஏற்படுத்தும் வகையில் பஸ்களில் விதிமுறை மீறி பொருத்தப்பட்டுள்ள ஏர் ஹாரன்களை தடை செய்யும் விதமாக, திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் ஆர்.டி.ஓ., கண்ணன் தலைமையில் மோட்டார் ஆய்வாளர்கள் சண்முக ஆனந்த், இளங்கோ, சிவக்குமார், செல்வம், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, எஸ்.ஐ.க்கள் செல்வ ஹரிசுதன், கருப்பையா ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில் 10 அரசு பஸ்கள், 30 தனியார் பஸ்கள் என 40க்கும் மேற்பட்ட பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்தனர். இதனால் பஸ் நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இது குறித்து ஆர்.டி.ஓ., கண்ணன் கூறுகையில், ‘‘விதிமுறை மீறி அதிக ஒலி எழுப்பும் வகையில் ஏர் ஹாரன் பொருத்தியிருந்த அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மீண்டும் விதிமுறை கடைப்பிடிக்காத பஸ்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும், அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் பஸ்களை இயக்காமல், வழித்தடம் மாறி இயங்கும் பஸ்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ஸ்பேர் பஸ்களை இயக்குவதற்கு சிறப்பு அனுமதி பெற வேண்டும். இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Tags : Dindigul ,RTO ,Road Safety Month Festival ,Dindigul district ,
× RELATED உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட அனுமதி