×

தி.நகர் தொகுதியில் யுபிஎஸ்சி தேர்வுக்கு பயிற்சி மையம்: பேரவையில் ஜெ.கருணாநிதி எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது தியாகராயநகர் எம்எல்ஏ ஜெ.கருணாநிதி பேசுகையில், அரசு சார்ந்த போட்டித் தேர்வுகளுக்காக பயிற்சி பெற அதிக எண்ணிக்கையில் மாணவ, மாணவிகள் தி.நகர் சட்டமன்றத் தெகுதியிலுள்ள பல தனியார் மையங்களில் பயிற்சி பெறுகிறார்கள். எனவே, ஏழை மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்ற வகையில், தி.நகர் தொகுதியில் அரசு போட்டித் தேர்வு பயிற்சி மையம் அமைக்க ஆவன செய்ய வேண்டும், என்றார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசுகையில், ‘சென்னை ஷெனாய் நகரில் ஏற்கனவே புதிய பயிற்சி நிலையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதனால், அதிக தூரம் போக வேண்டியதில்லை,
பக்கம்தான். அதுமட்டுமல்லாமல், யுபிஎஸ்சி தேர்வைத் தவிர, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், சீருடை பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளும் தமிழ்நாடு அரசால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

யுபிஎஸ்சி தவிர மற்ற போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி, பழைய வண்ணாரப்பேட்டை தியாகராய கல்லூரியிலும், சென்னை மாநிலக் கல்லூயிலும் ஏற்கனவே நடைபெற்று வருகிறது. எனினும் எல்லா பகுதிகளிலும் உள்ள கிராமப்புற மாணவர்கள், மற்ற எல்லா மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு ஏஐஎம் டிஎன் என்னும் YouTube channel-ம் Anna Institute of Management மூலம் தொடங்கப்பட்டு அனைத்துத் தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இதுமட்டுமல்லாமல், நோக்கம் என்னும் செயலியும், தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முதல்வர் 13ம் தேதி அடிக்கல் நாட்டு விழாவின்பொழுது, தேர்வுகளம் என்ற ஒருங்கிணைந்த கைபேசி செயலியும் கொடுத்திருக்கிறார். அந்தத் தேர்வுகளம் செயலி மூலமாகவும் மாணவர்கள் எந்த ஊரில் இருந்தாலும் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சியையும் பெற முடியும்,’ என்றார்.

Tags : UPSC ,T. Nagar ,J. Karunanidhi ,MLA ,Chennai ,Thiagarayanagar ,
× RELATED உன்னத திட்டங்களை செயல்படுத்தும்...