ராமநாதபுரம், ஜன. 28: கடந்த 5 மாதங்களாக இலங்கை சிறையில் தவிக்கும் பாம்பன் மீனவர்கள் 10 பேரை பிப்.4ம் தேதி இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு கருணை அடிப்படையில் விடுதலை செய்ய இந்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென ராமநாதபுரம் கலெக்டரிடம் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை மனு அளித்தனர். இது குறித்து அவர் அளித்த மனுவில், கடந்த ஆகஸ்ட் மாதம் பாம்பனில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற பாம்பன் பகுதி மீனவர்கள் 10 பேரை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து, அங்குள்ள சிறையில் அடைத்துள்ளனர். அவர்களுக்கு 18 மாத சிறை தண்டனையும் தலா ரூ.1.46 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாம்பன் மீனவர்களில் 10 பேரில் பல பேர் உடல்நிலை சரியின்றி உள்ளனர். அவர்களை உடனடியாக விடுவிக்க இந்திய ஒன்றிய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகிற பிப்ரவரி 4 ம் தேதி இலங்கையின் சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு கருணை அடிப்படையில் இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
