×

வாரத்திற்கு 2 நாள் விடுமுறை கோரி வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் ஸ்டிரைக்: வாடிக்கையாளர்கள் சேவை பாதிப்பு!

புதுடெல்லி: வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக உடனடியாக அமல்படுத்தக் கோரி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது வங்கிகள், ஒவ்வொரு மாத்திலும் முதல், 3வது மற்றும் 5வது சனிக்கிழமைகளில் வேலை நாட்களாக இயங்குகின்றன. இதை மாற்றி, அனைத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிறு விடுமுறை தினமாக அறிவிக்கக் கோரி வங்கி ஊழியர்கள், தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வந்தன.

இதுதொடர்பாக கடந்த 2024 மார்ச்சில் 12வது இருதரப்பு ஒப்பந்தத்தை இந்திய வங்கிகள் சங்கம் ஏற்றுக் கொண்டது. தற்போது இது ஒன்றிய அரசின் உத்தரவுக்காக காத்திருக்கிறது. இந்நிலையில், 2 ஆண்டாகியும் வாரத்திற்கு 5 நாள் வேலை நாட்களாக அமல்படுத்தப்படாததை கண்டித்து ஐக்கிய வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு இன்று நாடு முழுவதும் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததை தொடர்ந்து இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), பஞ்சாப் நேஷனல் பேங்க் (PNB) மற்றும் பேங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளின் வங்கி சேவைகள் பாதிக்கப்பபட்டுள்ளன.

ஏற்கனவே 2 நாள் விடுமுறைக்கு பிறகு இன்று வங்கிகள் திறக்கப்பட வேண்டுமென்பதால் இந்த வேலை நிறுத்தம் பொதுமக்களுக்கு பெரும் சிரமங்களை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், HDFC வங்கி, ICICI வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி போன்ற தனியார் துறை வங்கிகள் வழக்கம் போல் செயல்படும். ஏனெனில் இந்த வங்கிகளின் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் சங்கங்களில் உறுப்பினர்களாக இல்லை.யூபிஐ மூலம் பணம் செலுத்துதல் மற்றும் இணைய வங்கிச் சேவை போன்ற டிஜிட்டல் வங்கி சேவைகள் இன்று பெரிய அளவில் பாதிக்கப்படாது. இருப்பினும், ஏடிஎம்களில் பணம் கிடைப்பதில் சில தடங்கல்கள் ஏற்படலாம்.

Tags : New Delhi ,
× RELATED ஒவ்வொரு பெண்ணும் கல்வி கற்க,...