×

சென்னையில் பொது இடங்களில் உள்ள மரங்களை அனுமதியின்றி வெட்டுபவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம்!!

சென்னை: பொது இடங்களில் அனுமதியின்றி மரங்களை வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிகையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பொது இடங்களில் மரங்கள் மற்றும் கிளைகளை அகற்ற வனத்துறையிடம் விண்ணப்பிக்கும் நிலை மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பொது இடங்களில் உள்ள மரங்களை அகற்ற, நாளை மறுநாள் முதல் பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளம் மற்றும் நம்ம சென்னை செயலி மூலமாக விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மரங்களை அகற்றக்கோரும் விண்ணப்பங்கள் பெறப்பட்ட பிறகு பெருநகர சென்னை மாநகராட்சி பூங்கா கண்காணிப்பாளர், சமூக ஆர்வலர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மூலமாக கள ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் கள ஆய்வின் ஆய்வறிக்கை பசுமைக் குழுவிற்கு அனுப்பப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பசுமை குழுவின் நடவடிக்கை குறித்து விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சியின் இணையதளத்தின் வாயிலாகவும் விண்ணப்பதாரர்கள் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உரிய அனுமதியின்றி பொது இடங்களில் மரங்களை வெட்டுபவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மரக்கிளைகளை வெட்டுதல், மரத்தில் ஆணி அடித்து விளம்பரப் பலகைகள் பொருத்துதல், உள்ளிட்டவற்றிற்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Chennai Municipal Corporation ,Forest Department ,Chennai Municipality ,
× RELATED பழைய ஓய்வூதிய திட்டம் ஜனவரி 1 முதல்...