தா.பழூர், ஜன.7: அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் கீழகுடிகாடு கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு முட்டை அமினோ அமிலத்தின் முக்கியத்துவம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பஜன் கோவா வேளாண் கல்லூரி மாணவர்கள், கல்லூரி முதல்வர் சங்கர், ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்தகுமார் மற்றும் திட்ட அலுவலர் சுந்தரம் ஆகியோர் ஒருங்கிணைப்பின் கீழ் இந்த பயிற்சி நடைபெற்றது.
இக்கூட்டத்தில், வேளாண் கல்லூரி மாணவர்களான நவீன் மற்றும் பிரியதர்ஷன் ஆகியோர் முட்டை அமினோ அமிலம் ஒரு வளர்ச்சி ஊக்கியாக பயிர்களுக்கு செயல்படுகிறது எனவும், அதில் உள்ள நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் பற்றியும், ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி முட்டை அமினோ அமிலம் கலந்து தெளிப்பதன் மூலம் வேர் வளர்ச்சி மற்றும் பயிர் வளர்ச்சி நன்றாக இருக்கும் எனவும் அதன் தயாரிப்பு முறைகளை செயல் விளக்கமாக செய்து காண்பித்தனர்.
இக்கூட்டம் சிறப்பாக நடைபெற அபிலேஸ்வரன், காதர் உசேன், லோகேஷ் மற்றும் பரத்வாஜ் ஆகிய மாணவர்கள் உதவிகரமாக இருந்தனர். இக்கூட்டத்தில் கீழகுடிகாடு கிராமத்தை சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். நிறைவாக மாணவர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
