×

பிராட்வே பேருந்து நிலையம் 7ம் தேதி முதல் மூடல் ராயபுரம், தீவுத்திடலில் இருந்து மாநகர பேருந்து இயக்கப்படும்: எம்டிசி அறிவிப்பு

 

சென்னை: பிராட்வே பேருந்து நிலையத்தில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனைய பணிகள் நடைபெற உள்ளதால், அந்த பேருந்து நிலையம் நாளை மறுநாள் முதல் மூடப்பட்டு, ராயபுரம் மற்றும் தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து மாநகர பேருந்துகள் இயக்கப்படும், என எம்டிசி நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னையின் மிக பழைமையான பேருந்து நிலையமாக பிராட்வே பேருந்து நிலையம் உள்ளது. 1964ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்த இந்த பேருந்து நிலையத்திலிருந்து, ஆரம்ப காலகட்டத்தில் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் தொடங்கி பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.  2002ம் ஆண்டுக்கு பிறகு, போக்குவரத்து நெரிசல், இடப்பற்றாக்குறை உள்ளிட்ட பல காரணங்களால் பிராட்வேயிலிருந்து தென்மாவட்டங்கள் உள்ளிட்ட தொலைதூர பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பேருந்து சேவைகள், அப்போது புதிதாக கட்டப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டன.

அதை தொடர்ந்து, பிராட்வே பேருந்து நிலையத்தில் பெரும்பாலும் மாநகர பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, திருவள்ளூர், ஆவடி, பூந்தமல்லி, தாம்பரம், கிளாம்பாக்கம் என சென்னை மாநகருக்குள்ளாகவே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பிராட்வே பேருந்து நிலையம் அருகில் மெட்ரோ மற்றும் புறநகர் மின்சார ரயில் நிலையங்கள், உயர் நீதிமன்றம், குறளகம், வணிக வளாகங்கள், பஜார், சந்தைகள் என மக்கள் கூடும் இடமாக நகரின் முக்கியப் பகுதியாக பாரிமுனை இருப்பதால், நாளொன்றுக்கு சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான பயணிகளை கையாளும் பேருந்து நிலையமாக பிராட்வே பேருந்து நிலையம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகிறது.

அடிப்படை வசதிகளின்றி காணப்படும் இந்த பேருந்து நிலையத்தை நவீன முறையில் மேம்படுத்தவேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில்தான், பிராட்வே பேருந்து நிலையத்தில் பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து முனையம் அமைப்பதற்கு ரூ.822.70 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

போக்குவரத்திற்கும், பயணிகளுக்கும் மேலும் கூடுதல் வசதிகள் கிடைக்கும் வகையிலும், சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்திற்கு மேலும் பயனுள்ளதாக அமையும் வகையிலும், பிராட்வே பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே உள்ள தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்திற்கு சொந்தமான சற்று பழுதடைந்துள்ள குறளகம் கட்டிடத்தையும் இடித்து இத்திட்டத்துடன் இணைத்து பெரிய பேருந்து நிலையமும், வணிக வளாகமும் கட்டுவதற்கு தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் ஆலோசனை வழங்கியது.

இந்த பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம், 2 அடுக்கு அடித்தளம், 2 அடுக்கு பேருந்து நிறுத்தம், 6 அடுக்கு வணிக பயன்பாடு என மொத்தம் 10 அடுக்குகளை கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையத்தை பயன்படுத்த இருக்கும் பேருந்துகளின் எண்ணிக்கை சுமார் 1,100 ஆகும்.

பொதுமக்களுக்கு பெருமளவில் பயனளிக்கும் வகையில், மேலும் எளிதான, சீரான, நவீன, வசதியை வழங்கும். சென்னை மாநகரின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான அரசின் பல்வேறு தொலைநோக்கு திட்டங்களில் இத்திட்டமானது ஒரு முக்கிய மைல்கல்லாக விளங்கும், என்று தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது.

இதற்கான பணிகள் மேற்கொள்ள வசதியாக, வரும் 7 முதல் (நாளை மறுநாள்) பேருந்து சேவைகள் ராயபுரம், தீவுத்திடல் ஆகிய 2 தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. மெரினா காமராஜர் சாலை மற்றும் அண்ணா சாலை வழியாக செல்லும் பேருந்துகள் ராயபுரம் தற்காலிக பேருந்து டெர்மினலுக்கு மாறும். இதில் 6, 13, 21ஜி, 21எல், 60இ, 102, 109, மற்றும் 109ஏ போன்ற வழித்தடங்கள் அடங்கும். மேலும், அண்ணா சாலை வழியாக செல்லும் 11, 21, 26, 52, மற்றும் 54 போன்ற வழித்தடங்களும் ராயபுரத்தில் இருந்து இயக்கப்படும்.

கடற்கரை நிலையம், மண்ணடி, ஈவெரா சாலை, மற்றும் வியாசர்பாடி வழியாக செல்லும் பேருந்துகள் தீவுத்திடல் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். முக்கிய வழித்தடங்களில் 1, 4, 15, 20, 33பி, 35, 42, 56சி, மற்றும் 120 ஆகியவை அடங்கும். அண்ணா சாலை மற்றும் ஈவெரா சாலையிலிருந்து ராயபுரம் செல்லும் பேருந்துகள், பயணிகளை ஏற்றி இறக்குவதற்காக துறைமுக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே உள்ள வடக்கு கோட்டை சாலையில் நின்று, பின்னர் தற்காலிக பேருந்து நிலையம் செல்லும். காமராஜர் சாலை வழியாக செல்லும் சேவைகள் பாரிமுனை, என்.எஸ்.சி போஸ் சாலை, மற்றும் எஸ்பிளனேடு சாலை வழியாக செல்லும், என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

* நவீன வசதிகள்

ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து முனையமானது, பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு எளிதான, சீரான அணுகும் வசதி – பல்வேறு நுழைவாயில்கள் வழியாக உள்நுழையும் வசதிகள், ஆட்டோ மற்றும் டாக்சிக்கான ஒருங்கிணைந்த வசதி, சுமார் 470 கார், இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வசதி, மின்சார பேருந்துகளுக்கான சார்ஜிங் செய்யும் வசதி, மெட்ரோ ரயில் நுழைவாயில் உடன் இணைப்பு, கோட்டை புறநகர ரயில் நிலையத்துடன் இணைப்பு (ஸ்கைவாக்), என்எஸ்சி போஸ் சாலையை கடப்பதற்கான இணைப்பு, குடிநீர் மற்றும் நவீன கழிவறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கும்.

Tags : Broadway bus station ,Raipuram, Peninsular ,MTC ,Chennai ,Rayapuram ,Thivatidal ,
× RELATED மதுரைக்கு வந்த முதல்வர்...