திருவாரூர், ஜன.21: திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதலாமாண்டு மாணவர்கள் 100 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாக டீன் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார். திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண்டுதோறும் மாநில அரசின் ஒதுக்கீட்டில் 85 மாணவர்கள், மத்திய அரசின் ஒதுக்கீடு பிரிவிற்கு 15 மாணவர்கள் என மொத்தம் 100 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. இதனையொட்டி நடப்பாண்டில் இந்த மாணவர் சேர்க்கை முடிவுற்றுள்ள நிலையில், நேற்று மருத்துவ கல்லூரியின் கூட்ட அரங்கில் புதிதாக சேர்ந்துள்ள மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது நடைபெற்றது.
டீன் முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ராஜாராமன் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். பின்னர் டீன் முத்துக்குமரன் கூறுகையில், புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியின் விதிமுறைகள் மற்றும் கொரோனா விழிப்புணர்வு போன்றவை குறித்து விளக்கப்பட்டது. மேலும் இந்த மருத்துவ மாணவர்கள் 100 பேர்களுக்கும் நாளை (இன்று) முதல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் அடுத்த மாதம் பிப்.2ம் தேதி முதல் வகுப்புகள் துவங்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.