×

சப்-கலெக்டர், டிஎஸ்பி பதவிக்கான குரூப் 1 மெயின் தேர்வு தொடங்கியது: மையங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

 

சென்னை: துணை கலெக்டர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 78 பதவிகளுக்கான குரூப் 1 மெயின் தேர்வு நேற்று தொடங்கியது. சென்னையில் மட்டும் நடைபெறும் தேர்வை டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 78 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஏப்ரல் 1ம் தேதி வெளியிட்டது.

இதில் துணை கலெக்டர் 28 இடங்கள், போலீஸ் டிஎஸ்பி 7 இடம், வணிகவரி உதவி ஆணையர் 19, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் 15, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 3, தொழிலாளர் நல உதவி ஆணையர் 6 ஆகிய 78 பணியிடங்கள் அடங்கும். அதோடு உதவி வனப் பாதுகாவலர் 2 காலியிடங்களுக்கான குருப் 1 ஏ அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இத்தேர்வுக்கான முதல்நிலை தேர்வுக்கு 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கான முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி நடந்தது. இத்தேர்வை 1 லட்சத்து 86 ஆயிரம் 128 பேர் எழுதினர். தொடர்ந்து முதல்நிலை தேர்வுக்கான ரிசல்டை டிஎன்பிஎஸ்சி கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி வெளியிட்டது. இதில் தற்காலிகமாக 1801 பேர் மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களுக்கான குரூப் 1 மெயின் தேர்வு நேற்று தொடங்கியது. தமிழகத்தில் சென்னையில் மட்டும் மெயின் தேர்வு நடந்தது. இதற்காக திருவல்லிக்கேணி என்கேடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி தி முஸ்லிம் அரசு மேல்நிலைப்பள்ளி, தி.நகர் கர்நாடக சங்கீத மேல்நிலைப்பள்ளி, வேப்பேரி பென்டிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 18 இடங்களில் தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தது. காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கியது. முதல் நாளான நேற்று காலை முதல் தாள் தேர்வு நடந்தது.

அதாவது தமிழ் தகுதி தேர்வு நடந்தது. இது 100 மதிப்பெண்ணுக்கு நடத்தப்பட்ட தேர்வாகும். வினாக்கள் அனைத்தும் 10ம் வகுப்பு தரத்தில் கேட்கப்பட்டிருந்தது. தேர்வு எளிதாக இருந்ததாக தேர்வு எழுதி விட்டு வெளியே வந்த தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து இன்று 2ம் தாள் தேர்வு பொது அறிவும் (டிகிரி தரம்), நாளை 3ம்தாள் தேர்வும், 4ம் தேதி 4ம் தாள் தேர்வும் நடக்கிறது. மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தகட்டமாக நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். மெயின் தேர்வு, நேர்முக தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் அவர்களுக்கு பதவி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : DSP ,Chennai ,TNPSC ,Tamil Nadu Public Service Commission ,
× RELATED சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில்...