×

நான் செத்தாலும் அதிமுக கொடியுடன் தான் செல்வேன்: எலிக்கு தலையாக இருப்பதை விட புலிக்கு வாலாக இருப்பதே பெருமை; செங்கோட்டையனை கிண்டலடித்த ஜெயக்குமார்

சென்னை: நான் செத்தாலும் அதிமுக கொடியுடன் தான் செல்வேன். எலிக்கு தலையாக இருப்பதை விட, புலிக்கு வாலாக இருப்பதே பெருமை என்று செங்கோட்டையன் தவெகவுக்கு சென்றுள்ளதை ஜெயக்குமார் கிண்டலாக கூறினார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளார். தவெக நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், மேற்கு மண்டலத்தின் 4 மாவட்டங்களுக்கான அமைப்புச் செயலாளராகவும் செங்கோட்டையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் அதிமுகவில் இருந்து இன்னும் சிலரையும் தவெக பக்கம் இழுக்கும் பணிகளில் செங்கோட்டையன் ஈடுபடலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நான் பெரிதும் மதிக்கக் கூடியவர் அண்ணன் செங்கோட்டையன். அவர் ஒரு முடிவு எடுத்து தவெகவில் இணைந்துள்ளார். அதனால் ஒரு கருத்துதான் சொல்ல முடியும். எங்கிருந்தாலும் வாழ்க… அதேபோல் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பின் ஜெயக்குமாரும் செல்கிறார் என்று சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. எனக்கு எப்போதும் ஒரே கட்சி தான். நேற்று, இன்று, நாளை… ஏன் செத்தாலும் அதிமுக கொடியுடன் தான் செல்வேன். யார் வீட்டின் முன்பாகவும் சென்று காத்திருப்பவன் நான் அல்ல.

புலிக்கு வாலாக இருப்பதே பெருமை. ஆனால் எலிக்கு தலைவாக இருக்க கூடாது. இங்கே அதிமுக தான் புலி. எலி என்று எந்தெந்த கட்சிகளை சொல்கிறேன் என்பதை நீங்களே புரிந்து கொள்ளலாம். எனது வாழ்நாளில் புலிக்கு வாலாக இருப்பதையே பெருமையாக கருதுகிறேன். எலிக்கு தலையாக இருந்து பிரயோஜனம் கிடையாது. நான் திமுகவுக்கோ, தவெகவுக்கோ போக மாட்டேன். அது ஒருநாளும் நடக்காது. அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தில் இருப்பதே எனக்கு பெருமை. அதிமுக தான் சபாநாயகர், அமைச்சர், மாவட்ட செயலாளர், மாணவரணி செயலாளர், எம்ஜிஆர் மன்ற செயலாளர் என்று 15க்கும் அதிகமாக பதவிகளை கொடுத்தது. அதனால் வாழ்நாள் முழுக்க எம்ஜிஆர், ஜெயலலிதாவின் புகழை பாடும் வானம்பாடியாகவே இருப்பேன். வேறு எங்கும் செல்ல மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : AIADMK ,Jayakumar ,Sengottaiyan ,Chennai ,Thavega ,
× RELATED திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி...