- சென்னை
- அமைச்சர்
- சிவசங்கர்
- மின்சக்தி அமைச்சர்
- போக்குவரத்து
- பவர்
- சென்னை பெருநகரப் போக்குவரத்துக் கழகம்
சென்னை: சென்னை ஒன் செயலி வாயிலாக மின்னணு மாதாந்திர பயண அட்டையை மின் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் செய்து வைத்தார். சென்னை மாநகர் போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் கும்டா இணைந்து வழங்கும் “சென்னை ஒன் செயலி வாயிலாக ரூ.1,000 (கோல்டன் டிக்கெட்) ரூ.2,000 (டைமன் டிக்கெட்)” மின்னணு மாதாந்திர பயண அட்டை பெறும் வசதியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்து வைத்தார்.
தற்பொழுது, மாநகர் போக்குவரத்து கழக முக்கிய பேருந்து நிலையங்களில் மாதாந்திர பயணச்சீட்டு மையங்கள் வாயிலாக வழங்கப்பட்டு வரும் “விருப்பம் போல் பயணம் செய்யும்” ரூபாய் 1000 மற்றும் ரூபாய் 2000 மதிப்பிலான பயணஅட்டைகளை, “சென்னை ஒன் செயலி” வாயிலாக எங்கும் – எப்போதும் கைபேசியில் எளிதாக பெறக்கூடிய மின்னணு பயண அட்டைகளாக மாற்றப்பட்டுள்ளது. “சென்னை ஒன் செயலி” வாயிலாக பெறப்படும் இந்த மின்னணு பயண அட்டை வாங்கிய நாளிலிருந்து, தொடர்ந்து 30 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
மேலும், இது முழுக்க முழுக்க பணமில்லா பரிவர்த்தனை முறையில் இயங்குவதால், யுபிஐ அல்லது டெபிட்/கிரெடிட் கார்டுகள் மூலம் உடனடியாக கட்டணம் செலுத்தி, பயண அட்டை பெறும் வசதி உள்ளது. இதனால், பயணிகள் பாதுகாப்பான, கால விரையம் இல்லாமல், விரைவாக பயண அட்டையை பெற முடிகிறது. அதேபோல், கடந்த 9ம் தேதி அரியானாவில் நடந்த 2025ம் ஆண்டிற்கான 18-வது Urban Mobility India மாநாட்டில், தேசிய அளவில் கலந்துகொண்ட 17 பெருநகரங்களில் “நாட்டிலேயே சிறந்த பொது போக்குவரத்து அமைப்பு கொண்ட நகரமாக” சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.
இந்த விருதை பெற்ற மாநகர் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களை பாராட்டும் வகையில் அவர்களுக்கு, அமைச்சர் சிவசங்கரால் பாராட்டு சான்றிதழும், பதக்கமும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாநகர் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் பிரபுசங்கர், சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து அதிகார அமைப்பு (கும்டா) உறுப்பினர் செயலர் ஜெயக்குமார், மாநகர் போக்குவரத்துக் கழக இணை மேலாண் இயக்குநர் சுந்தரபாண்டியன் மாநகர் போக்குவரத்துக் கழக பொது மேலாளர்கள், உயர் அலுவலர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
