சென்னை: அதிமுக எம்எல்ஏ பதவியை நேற்று காலையில் ராஜினாமா செய்த செங்கோட்டையன், நடிகர் விஜய்யை சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து இன்று தவெகவில் தனது ஆதரவாளர்களுடன் இணைகிறார். அதிமுக மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், 1977ம் ஆண்டு முதல் 9 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். முதல்முறை சத்தியமங்கலம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அதன்பிறகு 8 முறை கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு துறைகளில் அமைச்சராக பணியாற்றியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக அமைப்பு செயலாளராக அவர் செயல்பட்டு வந்த நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் கோரிக்கை வைத்த நிலையில், கட்சி பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட அவர், பிறகு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார். அவருடைய ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனால் செங்கோட்டையன் விரக்தியில் இருந்தார். 50 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக கட்சியில் பல்வேறு பதவிகளில் இருந்த தன்னை எந்தவித கேள்வியும் கேட்காமல் கட்சியைவிட்டே எடப்பாடி நீக்கி விட்டதாக தனது ஆதரவாளர்களிடம் புலம்பி வந்தார். எடப்பாடியை பழிவாங்க ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு வியூகங்களை செங்கோட்டையன் வகுத்து வந்தார்.
இதை தெரிந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி அவருக்கு பதிலடி கொடுக்க முடிவெடுத்தார். அதனால், கோபிசெட்டிபாளையத்திலேயே அதாவது செங்கோட்டையன் தொகுதியிலேயே வருகிற 30ம் தேதி அதிமுக பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்றும், அந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்வார் என்று கட்சி தலைமை அறிவித்தது. இதனால் செங்கோட்டையன் இன்னும் மனஉளைச்சலுக்கு ஆளானார். தன்னுடைய சொந்த ஊரில் எடப்பாடி பலம் காட்டுவதால், அதற்கு முன்னதாக தான் அதிரடியாக எதாவது ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து நடிகர் விஜய் கட்சியில் இணைய செங்கோட்டையன் முடிவு செய்தார். இதற்காக அவர் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டது.
இந்த நிலையில், நேற்று பகல் 11.45 மணிக்கு சென்னை தலைமைச்செயலகம் வந்த செங்கோட்டையன், சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். முன்னதாக நிருபர்கள் அவரை நேற்று காலை முதலே பின் தொடர்ந்தனர். அப்போது அவர்களிடம், ‘‘இன்று ஒரு நாள் பொறுமையாக இருங்கள். நாளை (இன்று) உங்களுக்கு பதில் சொல்கிறேன்’’ என்றார்.
இதைத்தொடர்ந்து நேற்று மாலை செங்கோட்டையன் அவரது ஆதரவாளர்கள் சிலருடன் சென்னை, பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜய் வீட்டிற்கு சென்றார். அவரை ஆதவ் அர்ஜுனா தனது காரில் அழைத்து சென்று விஜய் உடன் சந்திக்க ஏற்பாடு செய்தார். சுமார் 2 மணி நேரம் விஜய் வீட்டில் செங்கோட்டையன் இருந்தார். அதில் ஒரு மணி நேரம் வழக்கம்போல காத்திருந்தார். பின்னர் ஒரு மணி நேரம் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, தவெக கட்சியில் இணைந்தால், தனது எதிர்காலம் மற்றும் தனது ஆதரவாளர்கள் நிலை என்ன என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இணைப்புக்கு நடிகர் விஜய் சம்மதம் தெரிவித்த நிலையில், இன்று நடிகர் விஜய் முன்னிலையில் பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் முன்னாள் அதிமுக எம்பி சத்தியபாமா உள்ளிட்ட ஆதரவாளர்களுடன் தவெக கட்சியில் செங்கோட்டையன் இணைகிறார். இதற்கான ஏற்பாடுகளை விஜய் கட்சி நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். செங்கோட்டையனுக்கு அமைப்பு பொதுச் செயலாளர் பதவி வழங்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
அதிமுக எம்எல்ஏக்கள் பலம் 59ஆக குறைந்தது
தமிழகத்தில் 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக 65 இடங்களில் வெற்றி பெற்றது. பின்னர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், அய்யப்பன் ஆகிய 3 அதிமுக எம்எல்ஏக்கள் ஓபிஎஸ்-சுக்கு ஆதரவாக செயல்பட்டனர். இதையடுத்து, அதிமுக எம்எல்ஏக்கள் பலம் 61 ஆக குறைந்தது. இதைத்தொடர்ந்து வால்பாறை தொகுதி அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி கடந்த ஜூன் 21ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். நேற்று கோபிசெட்டிபாளையம் அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் ராஜினாமா செய்தார். இதையடுத்து, தற்போது அதிமுக எம்எல்ஏக்களின் பலம் 59 ஆக குறைந்துள்ளது.
ஜெயலலிதாவின் தேரோட்டியை பரிதாபமாக பார்க்கும் மக்கள்
செங்கோட்டையன் தனக்கென்று பெரிய ஆதரவாளர்கள் பட்டாளத்தை எப்போதும் வைத்தது கிடையாது. ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருந்ததால், அதிமுக கட்சியினரை கண்டுகொள்ளாமல் இருந்தார். அதேநேரத்தில் ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளராக இருந்ததால் சசிகலாவுடன் மோதல் இருந்து வந்தது. செங்கோட்டையன் மகன் புகார் அளித்ததால், ஜெயலலிதா அவரது அமைச்சர் பதவியை பறித்தார். அன்று முதல் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டிருந்தார். செங்கோட்டையனை ஓரங்கட்டுவதற்காக அந்த மாவட்டத்தைச் சேர்ந்த தோப்பு வெங்கடாச்சலத்ைத அமைச்சராக்கினார். 2011ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற செங்கோட்டையனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லை. ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது பல எம்எல்ஏக்கள் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தாவினர்.
செங்கோட்டையனும் சென்று விடக்கூடாது என்பதற்காக அவருக்கு கல்வி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனாலும் மறைமுகமாக செங்கோட்டையன் எடப்பாடிக்கு எதிராக சதிவேலைகளில் ஈடுபட்டு வந்தார். இந்தநிலையில்தான், எடப்பாடியை வழிக்கு கொண்டு வர, செங்கோட்டையனை பாஜ கையில் எடுத்தது. எடப்பாடி பழனிசாமி, பாஜ கூட்டணியில் சேர்ந்தவுடன் செங்கோட்டையனை வழக்கம்போல பாஜ கழற்றி விட்டது. ஜெயலலிதாவின் தேரோட்டி என்று அழைக்கப்பட்ட செங்கோட்டையன், மறைந்த எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் பணியாற்றியதையும், தனது 50 ஆண்டு அரசியல் அனுபவத்தையும் மறந்து, புதிதாக கட்சி தொடங்கிய விஜய் உடன் கூட்டணி சேருவதை அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாது, பொதுமக்களும் அதிருப்தியுடன் பார்க்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
