ராஜபாளையம், ஜன.11: ராஜபாளையம் பகுதியில் டிராக்டர்களில் பொதுமக்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாய பணிகள் மற்றும் கட்டிடப் பணிகளுக்கு அதிக அளவு டிராக்டர் பயன்படுத்தப்படுகிறது. மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத வயல் பகுதிகளில் விவசாய பணிகளுக்கு டிராக்டர்களில் அதிக அளவு தொழிலாளர்களை ஏற்றிச் செல்கின்றனர். மேடு, பள்ளம் வரும் போது அதில் பயணம் செல்லும் தொழிலாளர்கள் கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆனால்,ஆபத்தை அறியாமல் தொழிலாளர்களும் டிராக்டர்களில் ஏறிச் செல்கின்றனர். விபத்து ஏற்படும் முன்பு காவல்துறை இதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.