சென்னை, நவ.26: ஆவடி அடுத்த சேக்காடு அண்ணாநகர் அன்னை சத்தியா நகரில், ரியாஸ் என்பவர் ஆர்.கே.மனிதநேய காப்பகம் எனும் பெயரில் மன நோயாளிகள் மறு வாழ்வு மையம் நடத்தி வருகிறார். இங்கு, 56 மனநலம் பாதித்தோர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், வேளச்சேரியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் தனது மனநலம் பாதித்த தாய் மேரியை கடந்த 20 நாட்களுக்கு முன் இங்கு சேர்த்தார். நேற்று முன்தினம் உடல்நிலை பாதித்து மேரி உயிரிழந்து விட்டதாக மகன் பாஸ்கருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர் விரைந்து வந்து விசாரித்த போது, காப்பகம் சார்பில் முறையாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. அவர் அளித்த புகாரின் பேரில், ஆவடி போலீசார், மேரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
