டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், காது கேளாதோருக்கான ‘டெப்லிம்பிக்ஸ்’ 25வது சீசன் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 25 மீ. ‘பிஸ்டல்’ பிரிவு தகுதிச் சுற்றில் முதல் இடத்தை 573.14 புள்ளிகளுடன் இந்தியாவின் பிரஞ்சலி பிரஷாந்த் துமாலும், 2வது இடத்தை 569.15 புள்ளிகளுடன் அனுயா பிரசாத்தும் பிடித்தனர். இதையடுத்து நடந்த இறுதி சுற்றிலும் ஜொலித்த பிரஞ்சலி பிரஷாந்த் 34 புள்ளிகளுடன், முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இது, இத்தொடரில் பிரஞ்சலி கைப்பற்றிய 3வது பதக்கமாகும். ஏற்கனவே கலப்பு அணிகளுக்கான 10 மீ. ‘ஏர் பிஸ்டல்’ பிரிவில் சகவீரர் அபினவ் தேஷ்வாலுடன் இணைந்து தங்கம் கைப்பற்றிய பிரஞ்சலி, 10 மீ. ‘ஏர் பிஸ்டல்’ தனிநபர் பிரிவில் வெள்ளி கைப்பற்றி அசத்தினார்.
இதை தொடர்ந்து நடந்த 10 மீ. `ஏர் பிஸ்டல்’ தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற அனுயா பிரசாத், 23 புள்ளிகளுடன் 4வது இடம் பிடித்தார். இந்தமுறை துப்பாக்கி சுடுதலில் 7 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என இந்தியாவுக்கு மொத்தம் 16 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
இதே போல ஆண்களுக்கான ‘பிரீஸ்டைல்’ மல்யுத்தம் 97 கிலோ பிரிவு பைனலில், துருக்கியின் ஓமர் சானரை வீழ்த்தி இந்தியாவின் சுமித் தஹியா தங்கம் வென்று அசத்தினார். ‘பிரீஸ்டைல்’ 86 கிலோ பிரிவு பைனலில் உக்ரைனின் அனாடோலி செர்வோனென்கோவிடம் தோல்வியடைந்த இந்தியாவின் அமித் கிருஷ்ணா வெள்ளி பதக்கம் கைப்பற்றினார். பெண்களுக்கான கராத்தே போட்டியில் 50 கிலோ பிரிவில் லோமா ஸ்வைன் வெண்கல பதக்கம் வென்றார்.
