உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த மதுார், சிறுதாமூர், பட்டா, அருங்குன்றம், பழவேறி, பினாயூர் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் கல்குவாரி மற்றும் கிரஷர்கள் இயங்கி வருகின்றன. இந்த கல்குவாரி மற்றும் கிரஷர்களிலிருந்து எம் சாண்ட் மற்றும் ஜல்லிக் கற்களை ஏற்றிக் கொண்டு தினசரி நுாற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் அருங்குன்றம், பழவேரி, பினாயூர், திருமுக்கூடல் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்கின்றன. இவ்வாறு செயல்படும் லாரிகளிலிருந்தும், வெளியேறும் புழுதியாலும் மேற்கண்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் பயிர்கள் பாதிப்புள்ளாகிறது.
இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய அவல நிலை உள்ளது. இந்த கல்குவாரி கிரஷரிலிருந்து வரும் புழுதி, கிராமப் புறங்களில் சூழ்வதால் கிராம மக்கள் சுவாசக் கோளாறு, ஆஸ்துமா போன்ற பல்வேறு பிரச்னைக்கு ஆளாகின்றனர். மேலும் கிராமப்புற சாலைகள் பெருமளவு பழுதாகி வருகிறது. இந்த கனரக லாரிகள் காலை மாலையில் செல்லும்போது பள்ளி மாணவ – மாணவிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அவ்வப்போது விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
