×

ஊட்டியில் பூத்து குலுங்கும் எவர்லாஸ்ட் மலர்கள்: சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை

 

ஊட்டி, நவ. 25: நீலகிரி பல்வேறு பகுதிகளிலும் பூத்துள்ள எவர்லாஸ்ட் மலர்கள் சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பூங்காக்களில் மட்டுமின்றி, சாலையோரங்கள் மற்றும் வனப்பகுதிகளிலும் அவ்வப்போது சில மலர் பூத்துக் காணப்படும். இது சுற்றுலா பயணிகளை மட்டுமின்றி, உள்ளூர் மக்களையும் கவர்ந்து வருகிறது. குறிப்பாக, குறிஞ்சி மலர்கள், ஜெகரண்டா, சேவல் கொண்டை மலர்கள், டேலியா, பிளேம் ஆப் தி பாரஸ்ட் போன்ற மலர்கள் அவ்வப்போது சீசனுக்கு ஏற்றார் போல் பூத்து காணப்படும். பெரும்பாலும், இந்த மலர்கள் சாலையோரங்களில் பூப்பதால், அப்பகுதியே மிகவும் அழகாக காட்சியளிக்கும். இதனை உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம்.

இந்த மலர்களை போன்றே அவ்வப்போது நீலகிரியில் பல்வேறு பகுதிகளிலும் தேயிலை தோட்டங்கள், சாலையோரங்களில் மஞ்சள் நிறத்தில் எவர்லாஸ்ட் மலர்கள் பூப்பது வழக்கம். இந்த மலர்கள் பல நாட்கள் வாடாமல் இருக்கும். இதனால், இதற்கு காகித பூக்கள் என்ற பெயரும் உண்டு. இந்த எவர்லாஸ்ட் மலர்களை பறித்து வந்து பெரும்பாலான பெண்கள் சுற்றுலா தலங்களில் வைத்து சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.  இதனை சுற்றுலா பயணிகளும் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில், ஊட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையோரங்களில் கைகாட்டி, காந்திப்பேட்டை, 6வது மைல், பாலகொலா, காத்தாடிமட்டம் போன்ற பகுதிகளில் இந்த மலர்கள் அதிகளவு பூத்துள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு ரசித்து செவ்துடன் அதனை புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர்.

இந்த மலர்களை பறித்து வந்து ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நுழைவு வாயில் பகுதியில் பல பெண்கள் விற்பனை செய்கின்றனர். ஒரு மலர் கொத்து ரூ.20 முதல் 50 வரை விற்பனை செய்யப்படுகிறது. மஞ்சள் நிறத்தில் வாடாமல் காகிதம் போல் காட்சி அளிப்பதால் இதனை பலரும் வாங்கி செல்கின்றனர். தற்போது இந்த மலரின் சீசன் என்பதால் ஊட்டியில் அனைத்து பகுதிகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. தவரவியல் பூங்கா சாலை ஓரங்களில் ஏராளமான வியாபாரிகள் இதனை பூங்கொத்துக்களாக மாற்றி விற்பனை செய்ய வைக்கப்பட்டிருப்பதால் அந்த இடமே மஞ்சள் நிறமாக அழகாக காட்சியளிக்கிறது.

 

Tags : Ooty ,Nilgiris ,
× RELATED குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப்பண்ணையில் 3...