ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை சர்வதேச கடற்பகுதியில் போதை பொருட்களை கடத்திச் செல்லும் படகுகள் மற்றும் கப்பல்களை செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு இலங்கையின் தெற்கு கடற்பரப்பான இந்தியப் பெருங்கடல் பகுதியிலிருந்து இலங்கை கடற்பகுதிக்குள் நுழைந்த ஒரு ஆழ்கடல் மீன்பிடி படகை இலங்கை கடற்படையினர் கைப்பற்றி தங்காலை மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.
அங்கு படகை ஆய்வு செய்ததில் அதில், 261 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள், 115 கிலோ ஹெராயின் என மொத்தம் 376 கிலோ போதை பொருட்கள் இருந்தன. மேலும் 2 கை துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டு படகிலிருந்த 6 இலங்கையை சேர்ந்த கடத்தல்காரர்களை கைது செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.1,500 கோடியாகும். மேலும் இந்த போதைப் பொருட்கள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து தொடர்ந்து இலங்கை கடற்படையினர் விசாரித்து வருகின்றனர்.
