- பாஜக
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- செல்வப்பெருந்தகை
- மோடி அரசு
- சென்னை
- காங்கிரஸ்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- மோடி
- யூனியன் அரசு
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடந்த மாதம் 19ம்தேதி கடிதம் எழுதினார். இதையடுத்து, ஒன்றிய அரசின் ஆய்வுக்குழு அக்டோபர் 25 முதல் 28ம்தேதி வரை 3 நாட்கள் காவிரி டெல்டாவில் கொள்முதல் செய்கிற நெல்லின் ஈரப்பதத்தை ஆய்வு செய்து அறிக்கையும் வழங்கினார்கள்.
அதற்கு பிறகு கோவை வருவதற்கு முன்பாக மீண்டும் ஒரு கடிதத்தை பிரதமருக்கு முதல்வர் எழுதினார். அதற்கான அறிவிப்பு கோவை வேளாண்மை மாநாட்டில் பிரதமர் அறிவிப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், ஒன்றிய அரசு, கொள்முதல் செய்யும் நெல்லின் ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த முடியாது என்று தமிழகத்தின் கோரிக்கை மறுக்கப்பட்டிருக்கிறது. ஒன்றிய பாஜ அரசின் இந்த அறிவிப்பு காவிரி டெல்டா விவசாயிகளுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
விவசாயிகளின் துயரத்தை பற்றியோ, அவர்கள் சிந்தும் கண்ணீரை பற்றியோ கடுகளவு கூட கவலைப்படாத பிரதமராக மோடி செயல்பட்டிருக்கிறார். இது தமிழக விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதியாகும். இதுகுறித்து தமிழக முதல்வர் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். அதுபோலவே கோவை, மதுரை மெட்ரோ ரயிலுக்கு 2023ம் ஆண்டு முதல் தமிழக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
கோவை, மதுரை மாநகர் மக்கள் தொகையை விட குறைவான மக்கள்தொகை கொண்ட இரண்டாம் கட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை பாஜ அரசு தொடங்கி நிறைவு பெற்று பயன்பாட்டில் உள்ளது. ஆனால் தமிழகத்தின் கோரிக்கையை ஒன்றிய அமைச்சர் மனோகர் லால் கட்டார், தமிழக அரசு தயாரித்து அனுப்பிய விரிவான திட்ட அறிக்கையை கடந்த நவம்பர் 14ம்தேதி தலைமைச் செயலாளருக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.
இதில் நிறைய தவறுகளும், குறைகளும் இருப்பதாக காரணம் கூறப்பட்டிருக்கிறது. இந்த காரணங்கள் அனைத்துமே நியாயமற்றவை ஆகும். தமிழகத்தின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்ற ஒன்றிய பாஜ அரசின் பாரபட்சப் போக்கையே இது வெளிப்படுத்துகிறது.
எனவே, இந்தியாவிலேயே பாஜ காலூன்ற முடியாத மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால் பல்வேறு முனைகளில் தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சிக்கிற வகையில் இத்தகைய அணுகுமுறையை கையாளப்பட்டு வருகிறது. பாஜ அரசின் ஓரவஞ்சனை போக்கை தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொண்டு உரிய பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
