- நிதிஷ்
- மோடி
- பாட்னா விமான நிலையம்
- பாட்னா
- பீகார்
- முதல் அமைச்சர்
- நிதீஷ் குமார்
- தேசிய ஜனநாயக கூட்டணி
- பீகார் சட்டமன்றத் தேர்தல்கள்
பாட்னா: பதவி ஏற்பு விழா முடிந்து புறப்பட்ட போது பாட்னா ஏர்போர்ட்டில் பிரதமர் மோடியின் காலில் விழுந்த பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீகார் சட்டப் பேரவை தேர்தலில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப் பெற்றதால், 10வது முறையாக நிதிஷ்குமார் முதல்வராக பதவியேற்கும் விழா நேற்று முன்தினம் பாட்னாவில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, விழா முடிந்ததும் டெல்லிக்கு செல்ல பாட்னா விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது, அவரை வழியனுப்ப வந்த 74 வயதான முதல்வர் நிதிஷ் குமார், மரியாதை நிமித்தமாக திடீரென பிரதமர் மோடியின் கால்களைத் தொட முயன்று கீழே குனிந்தார். இதை சற்றும் எதிர்பாராத பிரதமர் மோடி, நிதிஷ் குமார் காலில் விழுவதைத் தடுக்கும் விதமாக, உடனடியாக அவரது கைகளைப் பிடித்துத் தடுத்து நிறுத்தி, கை குலுக்கி சில வார்த்தைகள் பேசினார். இந்தச் சம்பவம் தொடர்பான காணொலியை எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு, நிதிஷ் குமார் பிரதமர் மோடியிடம் அதிகப்படியாக அடிபணிந்து போவதாகக் கூறி கடுமையாக விமர்சித்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
