வருசநாடு, ஜன. 6: கடமலைக்குண்டு அருகே, கட்டி முடித்து நீண்ட நாட்களாகியும் மகளிர் சுகாதார வளாகம் திறக்கப்படவில்லை. இதனால், கிராம பெண்கள் அவதியடைகின்றனர். கடமலைக்குண்டு அருகே, கோம்பைத்தொழு கிராமத்தில் 2 வருடங்களுக்கு முன்பு பெண்களுக்கு சுகாதார வளாகம் கட்டும் பணி துவங்கியது. 5 மாதங்களுக்கு முன்பு அனைத்து பணிகளும் முடிந்தன. ஆனால் தற்போது வரை சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால், சுகாதார வளாகத்தை சுற்றிலும் முட்செடிகள் அதிகளவில் வளர்ந்து காணப்படுகின்றன.
மேலும் முறையான பராமரிப்பு இல்லாததால் சுகாதார வளாக கட்டிடம் தொடர்ந்து சேதமடைந்து வருகிறது. சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் சாலையோரங்களையும், ஓடைகளையும் திறந்தவெளி கழிப்பிடமாக பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.