×

ஏட்டு மகன் மண்டையை உடைத்த உதவி கமிஷனர் மகன் கைது: மேலும் 5 பேர் சிறையிலடைப்பு

ஆவடி: கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் போலீஸ் ஏட்டு மகனின் மண்டையை உடைத்த உதவி கமிஷனர் மகன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். திருமுல்லைவாயல் சோழம்பேடு சாலை திரு.வி.க. தெருவை சேர்ந்தவர் ரமேஷ். உளவுத்துறை போலீஸ் ஏட்டு. இவரது மகன் மனோஜ்ராஜ் (20), ஆவடியில் தனியார் கல்லூரியில் பி.ஏ, 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த 2ம் தேதி மனோஜ்ராஜ், தனது நண்பர்களுடன் அதே பகுதி திருமலைவாசன் நகரில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி உள்ளார். அப்போது, அவருக்கும் அதே பகுதி பாரதி நகர் 4வது தெருவை சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ் உதவி கமிஷனர் மோகனின் மகன் செரி (22) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. ஆத்திரமடைந்த செரி தனது நண்பர்களுடன் சேர்ந்து மனோஜ்ராஜை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், மனோஜ்ராஜ் மண்டை உடைந்தது. அவரை மீட்டு ஆவடி உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து மனோஜ்ராஜ், செரி இருவரும் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகாரளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோஜ்ராஜை தாக்கியதாக செரி (22), அவரது நண்பர்களான ஆவடி காமராஜர் நகரை சேர்ந்த அசாருதீன் (20), சாம்ராஜ் (21), விஷால் (21) ஆகியோரையும், செரியை தாக்கியதாக மனோஜ்ராஜின் நண்பர்கள் ஆவடி பூம்பொழில் நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (28), திருமுல்லைவாயல், சோழம்பேடு சாலையை சேர்ந்த சுரேஷ் (21)  என 6 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Tags : Assistant Commissioner ,
× RELATED ஏப்.19ல் ஊதியத்துடன் விடுப்பு அளிக்காத...