ஈரோடு, ஜன. 4: ஈரோடு முனிசிபல் காலனி சக்தி விநாயகர் கோயில் வீதியை சேர்ந்தவர் சுதாகர் (36). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இவரது நண்பருடன் ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து பன்னீர்செல்வம் பார்க் செல்வதற்காக டவுன் பஸ்சில் ஏறி பயணித்தார். பஸ் நாச்சியப்பா வீதியில் உள்ள வேகத்தடையில் மெதுவாக சென்று கொண்டிருந்தபோது, சுதாகர் அருகே நின்றிருந்த மர்மநபர் ஒருவர், சுதாகரின் பாக்கெட்டில் இருந்த செல்போனை திருடிக்கொண்டு பஸ்சில் இருந்து இறங்கி ஓடினார்.
இதைப்பார்த்த சுதாகர் திருடன் என கூச்சலிட்டவாறே அந்த நபரை விரட்டினார். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் அந்த நபரை மடக்கி பிடித்து ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், அந்த நபர் ஈரோடு வி.வி.சி.ஆர்.நகர் 2வது வீதியை சேர்ந்த நாகராஜ் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து நாகராஜை போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.