திருப்புத்தூர், ஜன.4: திருப்புத்தூர் அருகே பிராமணம்பட்டி கிராமத்தில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய கொண்டு செல்லும்போது, பாதை பிரச்னை ஏற்பட்டது. திருப்புத்தூர் அருகே பிராமணம்பட்டி கிராமத்தில் மயானத்திற்கு தனியார் நிலத்தின் வழியாக செல்வது வழக்கம். தற்போது அந்த நிலம் பட்டா மாற்றப்பட்டு வேலியிடப்பட்டுள்ளது. பொதுப்பாதையை நிரந்தரமாக்க கோரும் வழக்கு கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் சிங்கப்பூரில் இறந்துள்ளார். அவர் உடல் நேற்று பிராமணம்பட்டிக்கு வந்தது. உடலை மயானத்திற்கு செல்ல வழியை திறக்க கிராமத்தினர் அதிகாரிகளிடம் கோரினர். இதனையடுத்து ஆர்.டி.ஓ.சுரேந்திரன், தாசில்தார் ஜெயலெட்சுமி, டி.எஸ்.பி.பொன் ரகு உள்ளிட்டோர் நிலத்தின் உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுமதி பெற்றனர். இந்நிலையில் கிராமத்தினர் வேலியை அகற்றி அவ்வழியாக இறுதி ஊர்வலம் சென்றனர். தொடர்ந்து நிரந்தர பொதுப்பாதைக்கான ஏற்பாடுகள் குறித்து வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர்.