அரியலூர்,ஜன.4:அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள பொன்பரப்பி கிராமத்தில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் கிராம சபை கூட்டம் திமுக வடக்கு ஒன்றியத்தின் சார்பில் நடைபெற்றது. இதில் ஒன்றிய(வ) செயலாளர் ஞானமூர்த்தி தலைமை வகித்தார்.கூட்டத்தில் பொன்பரப்பி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு, தேள் கடித்தால் உயிர்காக்கும் விஷமுறிவு மருந்துகள் இல்லை எனவும், அரியலூர் தலைமை மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்துகின்றனர். எனவே ஆரம்ப சுகாதார நிலையத்தில் உயிர்காக்கும் விஷமுறிவு மருந்துகள் இருப்பில் வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், திமுக ஆட்சியில் நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 100 யூனிட் இலவச மின்சாரத்தை நிறுத்தியுள்ளனர். அதனை மீண்டும் தர வேண்டும், குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும்.
திமுக ஆட்சியில் சுய உதவி குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கப்பட்டு வந்தது. தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனை மீண்டும் வழங்க வேண்டும். சிலிண்டர் விலை உயர்வு தொடர்ந்து அதிகரித்து அதனை குறைக்க வேண்டும். 100 நாள் வேலை திட்ட பணிகள் சரிவர வழங்கப்படவில்லை அதனை சீராக வழங்க வேண்டும் என நிர்வாகிகளும், பொதுமக்களும் அதிமுகவின் அவலநிலையை கூட்டத்தில் பதிவு செய்தனர். இதில், பகுதிப்பொறுப்பாளர் பாண்டியன் வரவேற்றார். மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் விசுவநாதன் சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சி இறுதியில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என மக்கள் முழக்கமிட்டனர். அதிமுகவிலிருந்துவிலகி சிலர் திமுகவில் இணைந்தனர்.