அவனியாபுரம், ஜன. 1: அவனியாபுரம் அருகே மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான 82 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது வெள்ளக்கல் குப்பை கிடங்கு. மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளில் இருந்து தினந்தோறும் 132 லாரிகளில் மூலம் சுமார் 650 டன் குப்பை தினமும் அங்கே கொட்டப்படுகிறது. இதை அங்கு மாநகராட்சி ஊழியர்கள் சுமார் 450 டன் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தரம் பிரிக்கின்றனர். நேற்று முன்தினம் குப்பைகளை தரம் பிரிக்கும் பொழுது அதில் குறைமாத சிசு ஒன்று இறந்த நிலையில் குப்பைகளோடு கிடந்தது இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக 94 வது வார்டு உதவி பொறியாளர் செல்வவிநாயகத்திடம் தெரிவித்தனர். இதனையடுத்து அவர் அவனியாபுரம் காவல்நிலையத்தில் து புகார் தெரிவித்தார். அவனியாபுரம் போலீசார் குறைமாத சிசுவைப் கைப்பற்றி பின்னர் வழக்குப்பதிவு செய்து வெள்ளக்கல் பகுதியில் புதைத்தனர்.
இதுகுறித்து அங்கு பணி செய்யும் மாநகராட்சி ஊழியர்கள் கூறுகையில், நாள்தோறும் மதுரையில் உள்ள மருத்துவமனைகளில் கருச்சிதைவு செய்யும் குறை மாத சிசுக்கள் வெள்ளக்கல் குப்பை கிடங்கிற்கு குப்பை லாரிகள் மூலம் அடிக்கடி வருகின்றது. ஆனால் நேற்று வந்த குறைமாத சிசு சற்று பெரியதாக இருந்ததால் தங்கள் அதிகாரியிடம் முறையிட்டோம் என்றனர். இதுகுறித்து அவனியாபுரம் போலீசார் அந்த குப்பையை கொட்டிய லாரி எந்த பகுதியில் இருந்து வந்தது என்று கண்காணிப்பு காமிரா மூலம் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.